tamilnadu

img

கல்லாத்தூர் கிராமத்தில் 10 நாட்களுக்கு மேல் குடிநீர் வரவில்லை!

கல்லாத்தூர் கிராமத்தில் 10 நாட்களுக்கு மேல் குடிநீர் வரவில்லை! 

ஜெயங்கொண்டம் அருகே, கல்லாத்தூரில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வராததைக் கண்டித்து, பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, கல்லாத்தூர் ஊராட்சி மாங்கொட்டை தெரு மற்றும் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் மாங்கோட்டை தெரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கமிட்டி அம்மன் கோயில் தெரு, மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளிட்ட 2  மின் மோட்டார்கள் பழுது காரணமாக, கடந்த 15 நாட்களாக சரிவர குடிநீர் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை  புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.  இந்நிலையில் குடிநீர் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம் கல்லாத்தூர் மெயின் ரோடு பேருந்து நிறுத்தம் எதிரே, சாலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். இதன்பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.