தீபாவளிக்கு முதல் நாள் புதுச் சேரியிலிருந்து திருப்பாதிரிப்புலி யூர் வழியாக தஞ்சைக்கு இராமே ஸ்வரம் இரயிலில் வந்துகொண்டிருந்தேன். கூட்டம் அலை மோதியது. அந்த இரயிலில் நூற்றுக்கணக்கான வடநாட்டு இளைஞர் கள் வந்துகொண்டிருந்தார்கள். எனக்குத் தெரிந்த ஓரிரு இந்தி சொற்களை வைத்துக் கொண்டு அந்த இளைஞர்களோடு அந்தக்கூட்டத்திலும் உரையாடிக் கொண்டு வந்தேன். அந்த இளைஞர்கள் விழுப்புரம் - புதுச்சேரி சாலை விரிவாக்கப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள். தீபாவளியை முன்னிட்டு கிடைத்துள்ள மூன்று நாள் விடுப்பில் சொந்த ஊருக்கு போக வாய்ப்பில்லாமல் இராமேஸ்வரம் செல்வதாக சொன்னார்கள். அப்போது பேசிக்கொண்டே இருக்கை யில் ஒரு இளைஞன் “தமிழ்நாட்டில் எல்லாம் நன்றாக இருக்கிறது. எங்களுக்கு எல்லாம் பிடித்திருக்கிறது. ஒன்றைத்தவிர. இங்கு யாருமே இந்தி பேசுவதில்லை. ஏன் உங்கள் ஊரில் யாரும் இந்தியை பேசுவ தில்லை” என்று கேட்டான். நான் அவனிடம் “உன் மாநிலம் எது?” என்று கேட்டேன். அவன் அதற்கு “மத்தியப் பிரதேசம்” என்று சொன்னான். “உங்கள் மாநில மொழி எது?” என்று கேட்டேன். அவன் “இந்தி” என்று பதிலளித்தான். “அது தான் உங்கள் ஊரில் பேசுகிறார்களா?” என்று கேட்டேன். “ஆம்” என்று உறுதியாக தலையாட்டினான். ஆனால் “உங்கள் ஊருக்கென்று ஒரு மொழி இருக்குமே?” என்று கேட்டேன்.
அவன் நெடு நேரம் யோசித்துவிட்டு, “மால்வி?” என்று சந்தேகமாக கேட்டான். அவனே சற்று நேரத்தில், “எங்க வீட்டில் உள்ள பெரியவர்கள் பேசுவார்கள். அது எங்க ஊர் கிராமப்புறங்களில் பேசும் மொழி.” என்று சொன்னான். அதற்குப் பின் அவன் மேல் பரிதாம் ஏற்பட்டதே தவிர எந்தக் கேள்வியும் எனக்கு எழவில்லை. “உன் தாய் மொழி ‘இந்தி’யா? ‘மால்வி’யா?” என்று நான் கேட்டால் அவனுக்கு அது புரியுமா என்று கூட எனக்குத் தெரிய வில்லை. அந்த இளைஞனுக்கு மட்டுமல்ல. அவர்கள் ஊரில் உள்ள பலருக்கும் இது தெரியாது. மத்தியப் பிரதேசத்தில் 1941 ஆங்கில அரசின் புள்ளி விவரக் கணக்குப் படி மால்வி மொழி பேசிய மக்களின் எண்ணிக்கை 16,78,087 பேர். ஆனால் அதே ஆண்டு இந்தி மொழி பேசிய மக்கள் எவ்வளவு பேர் தெரியுமா..? 14,40,906 பேர்கள் மட்டும் தான். அதாவது மத்தியப் பிரதேசத்தில் இந்தி மொழி பேசியவர்களை விட மால்வி மொழி பேசிய மக்களின் மக்கள் தொகை அதிகம். 1951லேயே நிலைமை தலைகீழாக மாறியது. இந்திய அரசின் மக்கள் தொகை கணக்குப் படி மால்வி பேசு வோர் 5,23,374 என்றும், இந்தி பேசு வோர் எண்ணிக்கை 58,42,114 என்றும் மாற்றப்பட்டது. இது இயல்பாக நடந்ததா..? அல்லது திணிப்பின் மூலம் நடத்தப்பட்டதா..?
தாய்மொழியையே மறக்கடிக்கும் கொடூரம்
இந்தியாவில் அரசியல் சீர்திருத்தம் ஏற்படவும் சுயாட்சி வழங்கவும் பிரிட்டிஷ் அரசாங்கம், இந்திய அரசாங்கச் சட்டம், 1935ஐ இயற்றியது. இதற்கு முன்னர் வழக்கில் இருந்த இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, நாட்டின் பாதுகாப்பு, நிதி போன்ற முக்கிய துறைகள் தவிர மற்ற பொறுப்புகள் இந்தியர்கள் வசம் ஒப்படைக்க ப்பட்டன. இப்புதிய ஆட்சி முறை மாநில சுயாட்சி என்றழைக்கப்பட்டது. இதன் கீழ் 1937 இல் மத்திய நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் முதல் தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெற்ற காங்கிரஸ் தனது மொழிக் கொள்கையில் இந்தியா விற்கு பொது மொழியாக இந்தியை ஏற்றுக்கொண்டது. அப்போது அதை எதிர்த்த ஒரே மாகாணம் தென்னிந்திய மாகாணமான சென்னை மாகாணம் மட்டுமே. அதிலும் குறிப்பாக தற்போதைய தமிழ்நாடு மட்டுமே. அதை திணித்தவர் இராஜாஜி. அதற்கு எதிராக தந்தை பெரியார் ஒருங்கிணைத்த போராட்டத்தில் தமிழ் ஆர்வலர்களும், சைவ மடங்களும் பங்கேற்றனர்; வலுவான மக்கள் எதிர்ப்பால் இந்தியை தென்னிந்தியா முழுவதும் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் வட இந்தியாவின் நிலைமை முற்றி லும் இந்தக் காலத்தில் இந்தி மயமானது.
பஞ்சாபில் இந்தியை ஆட்சி மொழி யாக்கும் சுற்றறிக்கையை அந்த மக்களுக்கு இந்தி தெரியாது என்பதால் மக்கள் பேசிக்கொண்டிருந்த உருது மொழியில் அச்சடித்து கொடுக்கும் அளவிற்கு இந்தி மயம் வேகமாக நடந்தது. அதனால்தான் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தி பேசும் மக்கள் தொகை 40 விழுக்காடு ஆனது. இதன் விளைவு மால்வி போன்ற மொழி களின் இன்றைய நிலைதான். தன் தாய் மொழியையே அவனுக்குத் தெரியாமல் மறக்கடிக்கும் அளவிலான கொடூரத்தின் அடிமை அடையாளம் தான் அந்த இளைஞன். அவன் மட்டுமல்ல. தாங்கள் இந்திக் காரர்கள் என்று நினைத்துக் கொண்டி ருக்கும் வட இந்தியாவைச் சேர்ந்த 90 விழுக்காடு மக்களின் நிலையும் கூட இது தான். 80க்கும் மேற்பட்ட உங்கள் மொழி களை முற்றிலும் அழித்து, அதன் இரத்த வெள்ளத்தின் மீது கட்டப்பட்ட பெரும் கோட்டை தான் நீங்கள் கொண்டாடும் இந்தி என்பதை அவர்களிடம் யார் போய் சொல்வது..? அல்லது அது நமக்கும் தான் தெரியுமா..?
இந்தி பெல்ட் என்று சொல்லும் மாநிலங்கள் எல்லாவற்றிற்கும் தனித்த மொழி இருக்கிறது. ஆனால் அவற்றை நாம் கூட இந்தி பெல்ட் என்றே பொதுப் புத்தி யிலிருந்து அழைக்கிறோம். இராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் இவற்றோடு சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்டவைகளையும் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் மேற்கண்ட எல்லா மாநிலங்களுக்கும் இராஜஸ்தானி, பஞ்சாபி, பீகாரி, மராத்தி, குஜராத்தி என்று தனித்த மொழிகள் இருக்கின்றன. இவற்றில் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரி யானா போன்ற மாநிலங்களை முழுவதும் இந்தியை தாய் மொழியாக கொண்ட மாநி லங்கள் போல் இன்று வரை ஒரு பிம்பத்தை கட்டி உருவாக்கி வைத்துள்ளார்கள். ஆனால் அதுவும் கூட போலி பிம்பமே என்பதை 70 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு நமக்குச் சொல்கிறது. இந்திய விடுதலைக்கு முன்பு வரை மேற்கண்ட இந்தி பெல்டுகளில் மட்டும் பேசப்பட்ட மொழிகளாக பிரிட்டிஷ் அரசு பட்டியலிட்டுள்ள மொழிகள் இந்தி, உருது, இராஜஸ்தானி, பஞ்சாபி உள்ளிட்ட மொழி களோடு இந்துஸ்தானி, மைதிலி, பிரசு பாஷா, பக்ரி, மேவாரி, ஜெய்புரி, சட்டிஸ்காரி, மார்வாரி, பந்தேலி, ஆஜ்மீரி, தம்தி, ராகோ பான்சி, பலாகி, லோடி, கிராரி, மிர்கனி, பைகனி, பாண்டோ, ஸ்வதி, அதுகுரி, பாடு, இராஜ்காடி, நுனியா, பங்கி, கோசாவி, பர்தேசி, கலாரி, அபு, பர்பி, கோசங்கா, பாடி, பஸ்தாரி, சடி, போவாரி, மகேசுரி, போபாலி, மாதுரி, சடாரி, போஜ்புரி, உத்கேதி ௲ போலி, கோரக்பூர், முசல்மானி, பூலியா, புவானி, பரத்பூரி, கங்காபாடி, உத்தாரி, லோதாந்தி, சங்கலி, வாணி, கோத்யானி, இராஜபுதானி, ஆக்ராவாலி, சார்மாலி, பாமி, கோர்க்காலி, குர்சார், மராரி, ஓகி, நிமாதி, மிர்சாபுரி, கோட்வாரி, கங்கேரி, தேவநாதரி, கோர்த்தி, பான்சாரி, கந்தால், பிரதாப்காடி, அகரி, பான்சாரி, பூலி, குருமாலி, போயாரி, இரிவை, மேர்வாரி, இரங்கடி, கால்பீ என்று 80க்கும் மேற்பட்ட மொழிகளை பட்டியலிடுகிறது.
இவை ஒன்றும் சமஸ்கிருதம் போல் சில நூறு பேரின் தாய் மொழி அல்ல. ஒவ்வொரு பகுதியிலும் லட்சக்கணக்கான மக்கள் பேசிய மொழிகள் ஆகும். ஆனால் இவற்றின் நிலை என்ன என்பது தான் நம் கேள்வியே. ஒரு மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல. அது அந்த மண்ணின் பண்பாட்டை, மக்களின் வரலாற்றை தாங்கியுள்ளது. மொழியை அழித்தால் அந்த மக்களை முழுவதும் அடிமையாக்கலாம் என்பதற்கு இந்தி பெல்டுகளே சாட்சி. அந்த இளைஞனின் சொந்த மாநில மான மத்தியப்பிரதேசம் நர்மதை - சோன் பள்ளத்தாக்குகளுக்குள் இருக்கிறது. பழைய, மத்திய, புதிய கற்காலம் மற்றும் இரும்புக் காலங்கள் முதல் மத்தியப்பிர தேசத்தின் வரலாறு தொடங்குகிறது. பிம்பேத்திகாவில் உள்ள 600 குகைகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கும் சுமார் 500 குகைகளில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் அவர்களின் வாழ்க்கை முறையையும் பதிவு செய்திருக்கின்றன.
சாகர்களும் குஷானர்களும் மத்தியப் பிரதேசத்தை உள்ளடக்கிப் பெரும் இராஜ்ஜி யமாக மவுரியர்களும் ஆட்சி செய்துள்ளா ர்கள். வடக்குப் பகுதியில் சாதவாகனர் களும், மற்றப் பகுதிகளைச் சத்ரபதிகளும் பின்னர் தென்னிந்திய மன்னர் கவுதமி புத்திர சதாகாரணியும் ஆதிக்கம் செலுத்தி யுள்ளார்கள். அவருக்குப்பிறகு குப்தர்கள், ஹூனர்கள், யசோதர்மன், ஹர்ஷர், ராஷ்ட்டி ரகூடர்கள், பராமார்கள், பண்டல்கண்ட் சாண்டெலாக்கள், கோண்டு ராஜ்ஜியம், டெல்லி, துருக்கி, குஜராத் சுல்தான்கள், மொகலாயர்கள், மராட்டியர்கள், ஹோ ல்கர்கள், மஹாகோசர்கள், சிந்திக்கள், போபாலை ஆண்ட ஆப்கானிஸ்தான் அரசர் தோஸ் மொமது கான் என அந்த மண்ணை எண்ணற்ற மன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்கள். கொடுங்கோன்மை மிக்க முடியாட்சி காலத்திலும், ஆங்கில ஆட்சிக் காலத்தி லும்கூட அங்கு இந்தி ஆட்சி மொழியாக இருந்ததில்லை. மால்வி, நிமதி, பகேலி உள்ளிட்ட அந்த மண்ணின் மக்களின் மொழிகளே அங்கு கோலோச்சியுள்ளன. ஆனால் முடியாட்சி, அடிமையாட்சி நீங்கி நம்மை நாமே ஆண்டு கொள்ளும் ஜன நாயக ஆட்சி முறை நிலைபெற்றுள்ள இந்த 70 ஆண்டுகளில் தான் அந்த மக்களின் மொழிகள் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளன என்பது வரலாற்று முரண்.
ஏன் இது நிகழ்ந்தது? இதற்குப் பின் வெறும் மொழி அரசியல் தான் உள்ளதா என்றால் இல்லை. இது ஒரு சித்தாந்த அரசியல். கிபி 1340 இல் தில்லியில் நிலை பெற்ற முகமதுபின் துக்ளக் ஆட்சி அங்கு அப்போது மக்கள் பேசிவந்த சிதைந்த பிரா கிரத மொழியை பார்த்தது. அது அப்போது ஒரு சீரான மொழியாக இல்லாத போது, அதில் தங்களின் அரபு மொழியை கொண்டு பாரசீக அரபு கலப்பால் ஒரு சீரான மொழி யாக உருது மொழி உருவாக்கப்பட்டது. உருது எனும் சொல்லுக்குப் பொருள், பாச றை, பாடி அல்லது படைவீடு என்பதாகும். அதன் பின் உருது மொழி இந்தியாவில் அவர்களின் அரசு மொழியாக இருந்தது. இந்தி மொழியானது ‘லல்லு ஜிலால்’ என்பவரால் உருது மொழியிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டதாகும். உருது மொழியில் இருந்த அரபு சொற்களை நீக்கிவிட்டு அந்த இடத்தில் சமஸ்கிருத மொழிச் சொற்களை மிகுதியாக சேர்த்து இந்தி மொழியைப் புதிதாய் உண்டாக்கினார். இவ்வாறு அவரால் உருவாக்கப்பட்ட இந்தி மொழிக்கும், அதற்கு முன்பாக வடநாட்டு மக்களால் பல இடங் களில் பேசப்பட்ட சிதைந்த பிராகிருத மொழி க்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. இந்தி மொழி என்பதே இந்து சனாதனத்தின் தாய் மொழியாக அவர்கள் கருதும் சமஸ்கிருதத்திலிருந்து உருவாக்கப்பட்டது. அதனை நன்கு உணர்ந்தவர்கள் உரு வாக்கிய சித்தாந்தமே இந்தி, இந்து, இந்தியா என்பதாகும்.
அந்த கொடூர சித்தாந்தத்தை காங்கிர சிற்குள் இயங்கிக்கொண்டிருந்த வலதுசாரி களின் துணை கொண்டு அரங்கேற்றி னார்கள். அவர்கள் கனவு கண்ட இந்து தேசியத்தின் பலி பீடத்தில் பலி கொடுக்கப் பட்டுள்ள மாநிலங்கள் தான் மத்தியப்பிர தேசம் உள்ளிட்ட இந்த இந்தி பேசும் மாநி லங்கள். இது தான் இன்றைய இந்துத்துவ அரசியலின் கேந்திரமான பகுதிகளாகவும் இருக்கின்றன என்பதை நாம் பிரித்துப் பார்க்கக்கூடாது. ‘‘ஏன் தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கிறீர்கள்” என்ற அந்த இளைஞனை போன்ற சிலர் நம்மூரிலும் கேட்கிறார்கள். அவர்களுக்கு இதுவரை கிடைக்காத அந்தக் கேள்விக்கான விடை இப்போது கிடைத்திருக்கும் என்றே நம்புகிறோம். 3000 ஆண்டுகளுக்கு நிகரான நாகரீக சமூ கத்திற்கான தொல்லியல் சான்றுகளோடு இருக்கும் தமிழ் மண்ணை போலி தேசி யத்தின் பலி பீடத்தில் வைத்து காவு கொடுக்க முட்டாள்களா என்ன? உலகின் பல்வேறு நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கும் தமிழை இந்தியாவைத் தாண்டி எங்கும் இல்லாத இந்தியைக் கொண்டு அழித்துவிட முடியுமா என்ன..? “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயரிய சித்தாந்தத்தை கொண்ட தமிழ் மண் நான்கு வர்ணக் கோட்பாட்டை முன்னிறுத்தி உள்ளே வரும் வைதீகத்தின் மொழி வடிவை ஏற்றுக் கொள்ளுமா என்ன..?
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்ற, அதிகாரத்திற்கு எதிரான முழக்கத்திற்கு சொந்தக்காரர்களான தமிழ் மண் ஆங்கிலேய ஆட்சியானாலும், காங்கிரஸ் ஆட்சியானாலும், சங்பரி வாரத்தின் நேரடி ஆட்சியானாலும் யாரு க்கும் அஞ்சாமல் மொழி உரிமைப்போரில் இந்தித் திணிப்பிற்கு எதிராக அதே கம்பீரத்தோடு எதிர்த்து நிற்கும் தானே. 1937லும், 1948லும் 1965லும் 1986 லும் தமிழகம் மட்டுமே இந்தி மொழித் திணிப்பிற்கு எதிராக தனித்துப் போராடியது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறு இல்லை. நமக்கு தோளோடு தோள் கொடுக்கும் தோழமைகளாக கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மராத்தியம் என்று பல்வேறு மாநிலங்களும் களத்தில் குதித்து ள்ளன. இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் இந்திய நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதற்கான போராட்டம். இந்தச் சூழ லில் ஒன்றிய அரசு உருவாக்கிய அலுவல் மொழி ஆய்வுக்குழு பரிந்துரை போன்ற எந்த வடிவில் இந்தியை திணிக்க நினைத் தாலும் அதை முற்றாக புறந்தள்ளுவதே இந்திய நாட்டின் பன்மைத்துவத்திற்கும், ஒற்றுமைக்கும் நல்லதாகும்.