tamilnadu

img

வண்ணக்கதிர் 4.4

ஆற்று வெள்ளம் மேட்டு மேலே ஏறுது -தெருவில்  ஆழி  போல  அலைகள் கொண்டு மாறுது! ஊற்று நீராய் வீட்டில் எல்லாம்  பாயுது-அங்கே  உள்ள தெல்லாம் அடித்துக் கொண்டு போவுது!

மக்கள் எல்லாம் உயிரைக் காக்க ஓடுது-ஆடு  மாடு கோழி அள்ளி வெள்ளம் ஆடுது நிற்கும் வீட்டை நீரின் வேகம் வீழ்த்துது  நிறைந்த மரங்கள் காற்றின் வேகம் சாய்க்குது!

ஊழி வெள்ளம் பார்த்து மக்கள் நொந்தனர்-ஊரில்      உணவும் நீரும்  இடமும்  இன்றி வெந்தனர்! சூழும் துன்பம் நீக்க வல்லார் யாவரே?-அங்கே  துன்பம் போக்கும்  கருணை உள்ளம் ஆவரே!

விளைந்த பயிர்கள் வீணாய் அழுகிப் போச்சுது-உழவர்  விட்ட கண்ணீர் வீதி நிறைய லாச்சுது களைந்து துன்பம் போக்க வேண்டும் அரசு-உழவர்  காக்க  விரைந்து கொடுக்க வேண்டும் காசு!

விளைத்த பொருட்கு உரிய விலையோ இல்லை-ஒன்றியம்  விதைக்கும் துன்பம் அதனால் பெரிய தொல்லை அளவிலா சட்டத் திருத்தக் கொடுமை   -மோடி  ஆட்சி  மக்கள்  மீது எய்யும் அம்பை!

களைத்து விட்டது விவசாயி வாழ்வு-அவன்  காணும் இன்பத் தீர்வு தானா சாவு? சளைக்க மாட்டான் விவசாயி சரிவை -அவன்  சங்கொலி  முழக்கம் போக்கும் தாழ்வை.