பக்கத்தில் அப்பாவும், மகனும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஐந்தாம் வகுப்பு பயிலும் மகன், அப்பாவிடம், அப்பா ஒரு கேள்வி கேககுறேன்... பதில் சொல்லுங்க..
கேளு.. கேளு..
குடிக்கலாம்... சாப்புடலாம்... எரிக்கலாம்.. அது என்ன..?
யோசித்து விட்டு, தெரியலையே.. நானும் காதுகளைத் தீட்டிக் கொண்டேன்.‘
தேங்காய்.. தண்ணியக் குடிக்கலாம்.. தேங்காய சாப்புடலாம்... ஓட்டை எரிக்கலாம்..
அப்பா விடவில்லை, இத யார் உனக்குச் சொல்லித் தந்தா..
நானே கத்துக்கிட்டேன் என்ற பதில் அவருக்கு கூடுதல் அதிர்ச்சி தந்தது போல் இருந்தது.
அதற்குள், என்ன அங்கிள்.. என்ற சத்தம் கேட்டுத் திரும்பினேன்.
சிறுவன் கேட்ட கேள்வியைச் சொல்லி, கடைசியில் நானே கத்துக்கிட்டேன் என்று சொன்னதையும் சொன்னேன்.
ஏன்... நீங்களும் நம்பலயா..? ஓரு ஆய்வுல 98 விழுக்காடு குழந்தைகள் புதிய கோணத்துல பாக்குறாங்கனு தெரிஞ்சுது... அதே குழந்தைகள்ல 30 விழுக்காடுதான் அஞ்சு வருஷம் கழிச்சு அப்புடி இருந்தாங்க.. இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு சோதிச்சதுல வெறும் 12 விழுக்காடுதான் புதிய கோணத்துல பாக்குறவங்களா இருந்தாங்க..
அப்புடி ஏன் சரிஞ்சுதாம்..வளர, வளர நிறைய புதிய கோணங்கள் கிடைக்குமே..?
தோல்விகள், கட்டுப்பாடுகள், மூட நம்பிக்கைகள்னு பல விஷயங்கள்தான் காரணம்.. உங்கள மாதிரிப் பெரியவங்கதான் இதயெல்லாம் திணிக்குறது..
நீ சொல்றது உண்மைதான்.. எங்க காலத்துல தெரியாத பேயை விட தெரிந்த பிசாசு மேல்னு சொல்வோம்.. புதிய கோணத்துல போயிர வேண்டாம்னு இது தடுத்துச்சு... பேய், பிசாசுன்னு மூட நம்பிக்கையையும் வளர்த்துச்சு..
நாங்க பேய், பிசாசுனு சொல்றதில்ல... அப்புடியே சொன்னாலும், நக்கலடிக்கதான் பயன்படுத்துவோம்..
பழையன கழிதலும் புதியன புகுதலும்னு சொன்னது சரிதானே..
வழுவல கால வகையினானே... பவணந்தி முனிவர் எழுதுன நன்னூல் சொல்றதுதானே அங்கிள்..
ஆமா... நினைவுல வெச்சுருக்கியே..
மறக்க முடியுமா.. நம்முடைய தமிழ் இலக்கணத்துக்கு இன்றும் அடிப்படையாக இருக்குதே.. அவரோட காலத்துல ஜெயங்கொண்டர், புகழேந்திப் புலவர், ஒட்டக்கூத்தர், ஔவையார், சேக்கிழார், கம்பர் எல்லாம் சமகாலப் புலவர்கள்..
12ஆம் நூற்றாண்டுதானே..
ஆமா, அங்கிள்... ஒட்டக்கூத்தர் பத்தி ஒரு சம்பவம் சொல்வாங்க... மறந்துட்டேன்.. ஒட்டக்கூத்தருக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்னு கேள்விப்பட்டுருக்கேன்..
அதுவா... குலோத்துங்க சோழன் பாண்டிய இளவரசியத் திருமணம் பண்ணிக்குவாரு... பாடல்கள்ல ரொம்ப ஈடுபாடு வெச்சுருந்த இளவரசி, தன்னோட புகழேந்திப் புலவரையும் கூட்டிட்டு வந்துருவாரு... ஆனா, அவருக்கு சிறைத்தண்டனைய ஒட்டக்கூத்தர் வாங்கித் தந்துருவாரு..
இளவரசி சீறிருப்பாங்களே..
ஆமா.. தன்னோட அறைக்குள்ள போய்த் தாழ்ப்பாள் போட்டுக்குவாங்க.. வெளில வரல... சாப்புடவும் இல்ல... ஒவ்வொரு புலவராப் போய்ப் பாடுறாங்க... யாரோட பாட்டுக்கும் அவங்க அசையல... அப்ப ஒட்டக்கூத்தர் வந்து பாட ஆரம்பிப்பாரு... பாடப் பாட இளவரசி அசையுறாங்க... ஒட்டக்கூத்தருக்கு உற்சாகம் அதிகரிக்குது... இளவரசி எந்திரிச்சு உக்காருறாங்க.. பாக்குறவங்க எல்லார் முகத்துலயும் மலர்ச்சி..
குலோத்துங்கரும் இருந்தாரா, அங்கிள்..
அவரு இல்லாமலயா.. அவருக்கும் முகத்துல ஒரே சிரிப்பு.. தொடர்ந்து ஒட்டக்கூத்தர் பாடுறாரு.. இளவரசி எந்திரிச்சு வர்றாங்க.. அப்பாடா, பிரச்சனை முடிஞ்சுதுன்னு எல்லாரும் நினைக்குறப்ப, படார்னு இன்னொரு தாழ்ப்பாளையும் போட்டுட்டு மறுபடியும் போய்ப் படுத்துக்கிட்டாங்க..
ஓ.. இதுதான் ஒட்டக்கூத்தருக்கு ரெட்டைத் தாழ்ப்பாளா..?
ஆமா... புகழேந்திப் புலவர விடுதலை பண்ணுன பிறகுதான் வெளில வந்தாங்க இளவரசி..
ஒட்டக்கூத்தர் புலவரா இருந்துகிட்டு, எப்புடி அவர சிறைல போட்டாரு..
வெறும் புலவர் இல்ல.. அவரு அமைச்சராவும் இருந்தாரு..
அவ்வையாரும் இதே காலத்துலதான் இருந்தாங்களா...
அவ்வையாருன்னு பல புலவர்கள் இருந்துருக்காங்க... 12ஆம் நூற்றாண்டுல இருந்த அவ்வையார்தான் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்லாம் எழுதுனாங்க..
இருவரின் உரையாடலையும் அவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருந்த சிறுவன், மறுபடி நான் ஒரு கேள்வி கேக்கலாமா என்றான். தேர்வுக்குத் தயாராகிறவர்கள் போல அனைவரும் கேள்வியை எதிர்கொள்ளத் தயாரானோம்.