மதுரை:
கோரிக்கையை ஏற்று சாதாரண பயணிகள்ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய ரயில்வே சாதாரண பயணி வண்டிகளை இயக்காமல் இருப்பதால் இந்தியா முழுவதும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனை சுட்டிக்காட்டி அவற்றை இயக்கிட ரயில்வே அமைச்சருக்கு நான் கடிதம் எழுதினேன். ரயில்வே அமைச்சரை நானும் வடசென்னை எம்.பி., கலாநிதி வீராச்சாமியும் நேரில் வலியுறுத்தினோம்.இப்போது ரயில்வே வாரியம் இந்திய ரயில்வே முழுவதும் உள்ள ரயில்வே பயணி போக்குவரத்து அதிகாரிகளை பயணி வண்டிகளை மெமு, டெமு, பாரம்பரிய பழைய பயணி வண்டிகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திட வசதியாக ஏற்பாடுகளை செய்திடவும் அவற்றுக்கான கால அட்டவணைகளை 16. 8. 2021-க்குள் அனுப்பி வைத்திடவும் அனைத்து ரயில்வேக்களையும் கோரியுள்ளது. தெற்கு ரயில்வேயில் பயணி போக்கு வரத்து அதிகாரி தெற்கு ரயில்வே முழுவதும் அனைத்து கோட்டங்களிலும் அதற்கான கால அட்டவணைகளை தயாரித்து அனுப்புமாறு கேட்டுள்ளார். அனைத்து கோட்டங்களும் அதற்கான அட்டவணைகளை அனுப்பி வைத்துள்ளன. விரைந்து பயணி வண்டிகள் இந்தியா முழுவதும் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். ரயில்வே அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.