வரலாற்றை மறைக்க முயலும் மோடி அரசு தமிழக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்!
கே. பாலகிருஷ்ணன் அறைகூவல்
சென்னை, ஜூன் 18 - தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். “கீழடியில் நகர நாகரீகத்தை ஆய்வு செய்து வெளிப்படுத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கீழடி அகழ் வாராய்ச்சி யின் அறிக்கையை வெளியிடாமல் தாமதப் படுத்தி மண்மூடிப் புதைக்க முயலும் ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த இடம் மாற்றம் நடந்திருப்பது, மறைமுக மிரட்டலே. அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது ஆய்வை முடிக்கும் முன்பே அவரை மாற்றியடித்தனர். உயர் நீதிமன்றம் வழிகாட்டிய பிறகுதான் அகழ்வாய்வு அறிக்கையை எழுத, அவர் அனுமதிக்கப்பட்டார். இப்போது அதை பொதுவெளிக்கே வராமல் மறைக்க பார்க்கின்றனர். இப்போது அவரை மீண்டும் தில்லியிலிருந்து நொய்டாவிற்கு மாற்றியுள்ளனர். இதுதான் பாஜகவின் வன்மம். வரலாற்றை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யவோ, அறியவோ கூடாது என்ற செயல் திட்டத்தின் வெளிப்பாடு. இந்த அராஜக போக்கை அனுமதிக்க முடியாது. கீழடி உள்ளிட்ட வரலாற்று ஆராய்ச்சிகளை காக்க, அறிவியல் அறிஞர்களை பாதுகாக்க தமிழ்நாட்டு மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்” என்று அந்த பதிவில் கே. பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.