புதுச்சேரி,பிப்.9- தமிழக அரசும் ஒப்புக்கொண்டால் மட்டுமே மேகதாது திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று ஒன்றிய ஜல்சக்தி துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் கூறியுள்ளார். புதுச்சேரியில் அமைச்சர் பிரகலாத் சிங் படேல் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் வளர்ச்சிக்காக புதிய நதிநீர் திட்டங்கள் 5 தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை கள் பெற்று, ஒன்றிய அரசின் நிதி உதவியோடு, மாநில அரசு இணைப்புடன் பணிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிறுதானிய உற்பத்தி அதிகம் நடைபெறுகிறது. இதனால் விவசாயிகள் வருமானம் பெருகும். இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது. தானியங்கள், பழங்கள் போன்றவற்றை கெட்டுப் போகாமல் பாதுகாக்க உணவு பதப்படுத்துதல் துறை முன்னுரிமை வழங்குகிறது. இதற்கு ரூ.2822 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் காய்கறி, பழங்கள் தரத்தை உயர்த்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. உலகை இந்தியாவுடன் இணைக்கும் வகையில், தென்னிந்தியாவின் தெற்கு நுழைவாயிலாக புதுச்சேரி விளங்குகிறது. கர்நாடகாவுடன் தமிழக அரசும் ஒப்புக் கொண்டால் மட்டுமே மேகதாது திட்டத்திற்கு அனுமதி அளிக்கப் படும். இரு மாநிலங்களும் சம்மதம் தெரிவித்தால்தான் ஒன்றிய அரசு அனுமதி அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.