tamilnadu

தியாகிகள் வைத்த கடைசி வணக்கம்

தியாகிகள் வைத்த கடைசி வணக்கம்
செவ்வணக்கம் - அவ்வணக்கம்
நெஞ்சில் கனக்கும் - அது
வாடாத பூவணக்கம்.

   தூக்குமரம் அந்த தேக்கு மரம் அந்த
   கருப்பு மரம்.... துக்கத்தில் வெளுப்படைய
   மறுபிறப்பில் தியாகி தோள்மாலை ஆகும்
   தவநிலையில்.... தூக்குக் கயிறு தொங்க

தூக்கு மேடையில் அதோ தியாகிகள்.
வணங்கும் புஜங்களில் இமயத் திரட்சிகள்
(தியாகிகள்)
இரும்பு இருதயங்கள்
இறுகிய முஷ்டியில் போய்குடி யிருக்கும்.
புஜத்தை நாண் ஏற்றி
செலுத்துகிறார்கள் பார் செவ்வணக்கம்.

     ஆயிரம் குழந்தையின் புன்னகை எடுத்து
    ஆர மாலையாய் கட்டித் தொடுத்து
    அணிவீர் அணிவீர் தியாகிகள் தோள்களுக்கு.
     பட்டாம்பூச்சியின் கண்ணீர் எடுத்து

நம் கண்ணீரையும் சேர்த்துக் குழைத்து
பன்னீர் ஆக்கித் தெளிப்பீர் கால்களுக்கு.
மரணத்தின் முந்தைய செவ்வணக்கம்
உயர்த்திய புஜத்தில் ஊஞ்சல் கட்டுது பொன்னுலகம்!
(தியாகிகள்)
பூமிக்கும் வானுக்கும்
தியாகிகள் செலுத்திய கடைசி வணக்கம்
புதுயுகச் சாளரத்தை
திறக்கும் பாவனை காட்டி கை உயரும்!

   மரணம் அங்கே மகிமை பெற்றது.
   அஸ்தமனமே விடியலை வரைந்தது.
   செவ் வணக்கத்தில் செக்கர் வான் வந்தது!
   வானம் தாண்டி வாழ்க்கை விரிந்தது!

உயிரின் உயரம் நிலவைத் துளைத்தது!
மரணத்துக்குள் ஜனனம் சூல்கொண்டது!
தியாகியின் கடைசி புஜ வணக்கம்
நீதியின் செங்கோல் போல் கை உயர்ந்த நிஜ வணக்கம்!
(தியாகிகள்)
(சின்னியம்பாளையம் தியாகிகளின் கடைசி வணக்கத் தோற்றத்தை புகைப்படத்தில் 
கண்ணுற்றுப் பிறந்த கவிதை)