சென்னை,ஜன.12- சிபிஐ சோதனை மூலம் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பை மிரட்டும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மனித உரிமை செயற்பாட்டாளர்களை போலியான வழக்குகள் மூலம் சிறையிலடைப்பது, ஜனநாயக அமைப்புகளை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 8.1.2022 சனிக்கிழமை அன்று சிபிஐ அமைப்பின் மூலம் மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் சோதனையிடல் நடந்துள்ளது. நடைபெற்ற சோதனைக்கு பிறகு வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில் உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதோடு, அந்த அமைப்பை முடக்கவும், அந்த அமைப்பின் நோக்கம் மற்றும் செயல்பாட்டை முடக்கும் நோக்கத்தோடும் இத்தகைய கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமையை பாதுகாத்து வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் “சமூக சிந்தனை வளர்ச்சி மையம்” (Centre for Promotion of Social Concern) என்ற அரசு சாரா அமைப்பு மூலம் தமிழகத்தில் செயல்பட 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் கண்காணிப்பகம் எனும் அமைப்பு பல்வேறு மனித உரிமை மீறல் பிரச்சனைகளில் தலையிட்டு போராடி வருவதோடு பாதிக்கப்படும் மக்களுக்கும் நிவாரணங்களை பெற்றுத்தரும் பணியிலும் ஈடுபடுகிறது.
மேலும், ‘’மனித உரிமைக் கல்வி நிறுவனம்’ மூலம் மனித உரிமை கல்வியை பரவலாக்கும் முயற்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. ஏற்கனவே இந்த அமைப்பின் வங்கிக் கணக்குகளை முடக்குவதன் மூலம், அதன் செயல்பாட்டை முடக்க முயற்சித்த ஒன்றிய அரசு ,தற்போது சிபிஐ சோதனை எனும் பெயரால் இவ்வமைப்பின் செயல்பாட்டை தடுக்க நினைப்பது ஜனநாயகத்தில் மிகவும் ஆபத்தான போக்காகும் என்பதோடு, அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் எந்தவொரு தனிநபரையும், அல்லது அமைப்பையும் முடக்குவதற்கான முயற்சியாகவே சிபிஐ யின் சோதனையை கருத வேண்டியுள்ளது. ஜனநாயக அமைப்புகளின் மீது தொடுக்கப்படும் இத்தகைய தாக்குதல்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு எடுத்து வரும் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் மனித உரிமை பாதுகாப்புப் பணியில் மிகச் சிறந்த பங்களிப்புகளை செய்து வரும் மக்கள் கண்காணிப்பகம் மீது ஒன்றிய அரசு ஒடுக்குமுறையை ஏவியிருப்பதை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ் ஆகியோ ரும் வன்மையாக கண்டித்துள்ளனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
மனித உரிமை பாதுகாப்புப் பணியில் மிகச் சிறந்த பங்களிப்புகளை செய்து வரும் மக்கள் கண்காணிப்பகம் மீது ஒன்றிய அரசு ஒடுக்குமுறையை ஏவியிருப்பதை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ் ஆகியோ ரும் வன்மையாக கண்டித்துள்ளனர்.