tamilnadu

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆதாரம் கேட்டால் முதல்வர் வீடு முற்றுகை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி பேட்டி

மதுரை, பிப்.10- தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பொதுமக்களிடம் ஆதாரங்கள் கேட்டால் பெண்கள் ஒன்று திரண்டு முதல்வரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் கே.பாலபாரதி ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் ஊர்வலம்-ஆர்ப் பாட்டம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பெண்கள் 50 அடி நீள தேசியக்கொடியை ஏந்தி வந்தனர். பேரணியைத் தொடர்ந்து சின்னக்கடை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி செயலர் கே.நஜிமா பேகம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற முன்னாள் தலைவர் கே.பாலபாரதி நிறைவுரையாற்றினார்.  முன்னதாக செய்தியாளர்களிடம் பாலபாரதி கூறியதாவது:- மத்திய அரசுஅமல்படுத்தியுள்ள குடியரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதி வேட்டுக்கு எதிர்ப்புத்தெரிவித்து முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி அனைத்து மதங்களையும் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் பங்கேற்று வருகின்றனர். நாட்டில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சம மரியாதை, உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் மத்திய அரசு அரசியல் அமைப்புச்சட்டத்தை அவமதிக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை அமல்படுத்த முடியாது என்று கேரளம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் தீர்மானமாக அறிவித்துள்ளன. கேரள சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஆனால், அதிமுக அரசு மத்திய அரசு கொண்டு வரும் அனைத்தையும் கைகட்டி எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்கிறது. மத்திய அரசு மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை வாபஸ்பெற வேண்டும். ஏப்ரல் முதல் தேசியமக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போதும் போல் இயல்பாக நடத்த வேண்டும். கணக்கெடுப்பின்போது வீட்டில்உள்ளவர்களிடம் ஆதாரங்கள் கேட்கப் படக்கூடாது. அவ்வாறு ஆதாரங்கள் கேட்டால் அனைத்து பெண்களை அமைப்பினரையும் ஒன்று திரட்டி முதல்வரின் வீட்டை முற்றுகையிட்டு நியாயம் கேட்கும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

;