மதுரை க.சரவணன்
நவம்பர் கடைசி வாரம் முதல் வகுப்பறைகள் கொண் டாட்டமாக இருந்தன. வழக்கமான வகுப்பறைகள் இல்லை. முதல் பெஞ்ச், கடைசி பெஞ்ச் என்ற வித்தி யாசம் இல்லை. வகுப்பறைகளில் சமத்துவம் நிலை பெற்றிருந்தது. ஆசிரியர், மாணவர் என்ற வித்தியாசம் இன்றி, கரம்பிடித்து, தோழமையுடன் பழகினர். ஆசிரியர்கள் ஆட்டக் காரர்களாகத் திகழ்ந்தனர். ஆட்டநாயகர்களாகக் காட்சியளித் தனர். மாணவர்கள் சக தோழமையுடன் கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர். கற்றுக்கொடுக்கும் நிலையில் இருந்து செதுக்கும், வடிவமைக்கும் நிலைக்கு ஆசிரியர் மாறி இருந்தார். இதற்கெல்லாம் காரணம், 2022-2023 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை யின்போது கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி வெளியிட்ட கலைத் திருவிழா அறிவிப்புதான். தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறி முகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக் கொணரும் விதமாகவும், பள்ளி கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். வகுப்பறைகள் சுறுசுறுப்பாக திகழந்தன. ஏறக்குறைய நவம்பர் கடைசிவாரத்தில் ஆரம்பித்து, டிசம்பர் இரண்டாம் வாரம் வரை கொண்டாட்டங்கள் தொடர்ந்தன. இரண்டாம் பரு வத்தேர்வு அச்சுறுத்தல்கள் கலைக்கு முன்னால் காணாமல் போயின. தேர்வு குறித்த பயம், பதட்டம் எவரிடமும் இல்லை. ஒருசில மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே ரிசல்ட் பாதிக்குமே என தவித்தனர். கலை பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.
குழந்தை கள் தங்கள் கருத்துக்களை, தாங்கள் நம்புவதற்கும், சத்திய மானவற்றை ஆராய்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும் ஒரு பாலமாக அமைந்தது. இந்தக் கலைச் செயல்பாடுகள், குழந்தைகளின் பிற கற்றல் செயல்முறைகளில் மிகவும் சுறுசுறுப்புடனும் ஆழமாகவும் ஈடுபட உதவின. அதுவே, தேர்வு பயத்தைப் போக்கி இருந்தது. “டேய்! பரீட்சைக்கு படிக்காம, இப்படி ரிகர்சல் ரிகர்சல்லுன்னு போயிடுற” என ஆசிரியர்கள் பயந்தனர். “அதெல்லாம் பார்த்துக்கலாம், சார். பரிட்சைக்கு படிச்சுட்டா போச்சு ” என்ற தைரியத்துடன் மாணவர்கள் இருந்தனர். கலை குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனை மேம் படுத்துவதோடு மட்டுமின்றி அவர்களைத் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றி இருந்தது. மாணவர்கள், அவர்களுக்குப் பிடித்த கலையைக் கற்றுக்கொள்வதால் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தை பற்றி ஆழமான புரிதலைக் கொண்டு விளங்கினர். இக்கலைத் திருவிழா பல்வேறு கலை வடிவங்களுக்கு ஊக்கமளித்தது. உள்ளுர்க் கலைகளைக் கற்றுக் கொள்ள உதவியது. மேலும், பல கலைஞர்கள் நடுவர்களாக பங்கேற்ப தற்கும் வாய்ப்புகளை உருவாக்கி தந்தது. தமிழகத்தின் பாரம் பரியக் கலை வடிவங்கள் மற்றும் பண்பாட்டை குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டனர். அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, மாநில அளவில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றியது குழந்தை களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெருமிதமான செயலாகும். “கிராமப்புற மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த போதிய தளம் இல்லை. கலைத்திருவிழா பல மாணவர்களின் திறமையை வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத் திருவிழா நடத்தப்பட்டது.
இதில் சுமார் 28.50 லட்சம் மாணவர்கள் போட்டியில் பங்கேற்று கலைத்திறனை வெளிப்படுத்தினர். சுமார் 1750 மாணவர்கள் மாநில அளவிலான கலைத்திருவிழாவில் வெற்றிபெற்று, பரிசு பெறுகின்றனர். கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கலைத்திருவிழாவை கொண்டாடுகின்றனர். இதற்கு காரணம் நமது தமிழ்நாடு முதலமைச்சர்” என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறினார். வகுப்பறைகள் கொண்டாட்டம் நிறைந்ததாக இருக்க வேண்டும். கலைகளை வகுப்பறையில் கற்பித்தலுடன் இணைக்க வேண்டும். கலைகள் வழிக் கல்வி உண்மையான கொண்டாட்டங்களை வகுப்பறையில் கொண்டுவரும். வரும் காலங்களில் கற்றல் கற்பித்தல் நுண்கலைகளுடன் அமைவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “இங்கு வெற்றிபெற்றவர், சாதாரண வெற்றியை பெற வில்லை. லட்சக்கணக்கான மாணவர்களிடம் போட்டி போட்டு வெற்றிபெற்று இங்கு வந்துள்ளனர். அவர்களது துணிச்சல், தன்னம்பிக்கை, அறிவாற்றாலே காரணம். இதை பயன்படுத்தி தங்களது திறமைமையை மேலும் மேம்படுத்தவேண்டும். பள்ளி பாட புத்தகங்கள் தவிர, பள்ளி கல்வித்துறை கலைத் திறனையும், அறிவுத்திறனையும் மாணவர்கள் மத்தியில் ஊக்குவித்து வருகிறது. தமிழ்நாட்டில் 13,210 அரசு பள்ளி களில் இருந்து 28,53,882 மாணவர்கள் 206 வகையான கலைப் போட்டியில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். கல்வித் துறைக்குப் பாராட்டுக்கள். கலைத்திறன் மூலம் மாணவர்கள் சிந்தனைத் திறன் மேம்படும்” என்று கூறினார். உண்மையில் பள்ளிக்கல்வித்துறை சுறுசுறுப்புடன் இயங்கிவருகின்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், பள்ளி மேலாண்மைக் குழு கட்டமைப்பு, எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்பாட பிரிவுகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, கல்வி கட்டணமும் செலுத்தப்படுகிறது.
புதுமைபெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் படிக்கும் அரசு பள்ளியில் படித்த மாணவி களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. நவீன ஆய்வகங் கள், ஸ்மார்ட் வகுப்பறை அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் இடையே கணிதம், அறிவியல் சார்ந்த சிந்தனையை ஊக்குவிக்க வானவில் மன்றம் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இவை எல்லாம் அரசு பள்ளியை மேம்படுத்தவும், அரசு பள்ளி மாணவர்களை மேம்படுத்தவும் அரசு ஏற்படுத்தியுள்ள திட்டங்கள். இந்த கலைத்திருவிழா போட்டியில் முதல் 20 இடங்கள் பிடித்த மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல அரசு முடிவெடுத்துள்ளது. முதல்வர் பேசும் போது, மாணவர்கள் கலையைத் தங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், கலை அறிவு மற்றும் பகுத்தறிவை இச்சமுதாயத்திற்கு விதைக்க வேண்டும் என்றார். ஆனால், கலை என்பது கற்பித்தலுடன் இணையும் போது மகிழ்ச்சியான வகுப்பறை பிறக்கும். அதனை நோக்கி ஆசிரியர்கள் நகர வேண்டும். அப்படி நகர்ந்தால் ஒவ்வொருநாளும் வகுப்பறை திருவிழாவாகத் திகழும்.