tamilnadu

img

மதவாத சக்திகளை வளரவிடோம்!

சென்னை, ஜன.13 - தமிழ்நாட்டில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை ஒருபோதும் இந்த அரசு வளரவிடாது என்றும் எந்தவொரு வன்முறையும் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார். சட்டப்பேரவையில், ஆளுநர் உரை  மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து  பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கடல் கண்டு மலைகண்டு பயன் கொண்ட  தமிழ்நாடு வாழ்க;  களங்கண்டு கலை கண்டு கவின் கொண்ட தமிழ்நாடு வாழ்க; உடல் கொண்டு உரங்கொண்டு உயர்வாண்ட தமிழ்நாடு வாழ்க; உளமாண்டு உலகாண்டு புகழாண்ட தமிழ்நாடு வாழ்க! வாழ்கவே!” என்று கூறித் தமது உரையை துவக்கினார்.

மதவாதத்திற்கு எதிரானவர்கள் நாங்கள்!

“நாங்கள் மதத்துக்கு எதிரான வர்கள், நாத்திகர்கள் என்று சொல்லி,  கோயில்களை சரிவர பராமரிக்கவில்லை என்று ஒரு கூட்டம் வீண் வதந்திகளைச் செய்திகளாகப் பரப்பிக் கொண்டிருக் ருக்கிறது. நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரானவர்களே தவிர; மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல. மக்களின் மத நம்பிக்கையை தங்களது சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்பவர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகளே தவிர; நம்பிக்கை யாளர்களுக்கு எதிரிகள் அல்ல.

தூற்றும் கபட வேடதாரிகள்

அற நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலம், கட்டடம்,மனை ஆகியவற்றின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 3,150 ஏக்கர் நிலம் உள்ளிட்ட சுமார் 3,657 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உண்மையான பக்தர்கள் இதைப் போற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், போலியான கபடவேடதாரிகள் அரசுக்கு  நல்ல பெயர் கிடைப்பதை பொறுத்துக் கொள்ள இயலாமல் தூற்றிக் கொண்டிருக் கிறார்கள். இப்படி சாதனைகள் செய்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. அனைத்து கோயில்களும் புத்தொளி பெறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் அவர்கள் அவதூறு செய்துகொண்டிருக்கிறார்கள்.

பொள்ளாட்சி ஒரு அவமானம்!

இந்த ஆட்சியில் மதக் கலவரங்கள் நடந்துள்ளதா? சாதிக் கலவரங்கள் நடந்துள்ளதா? சொல்லுங்கள்.பொது மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதா?  அப்பாவி உயிர்கள் பறிபோனதா?  நெஞ்சை உலுக்கக்கூடிய பொள்ளாச்சி சம்பவமும், மர்மத்தின் உச்சமாய் விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய கொட நாடு கொலைகளும், கொள்ளைகளும் யாருடைய ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தன என்பதை மக்களும் நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை திறம்பட நிலைநாட்ட இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ் கிறது. அதன் காரணமாகவே, பல்வேறு  நாடுகளிலிருந்து தொழில் முதலீட்டா ளர்கள் தமிழ்நாட்டினைத் தேடி வந்து  இங்கே முதலீடு செய்து கொண்டிருக் கிறார்கள்.   தமிழ்நாட்டில் மதவாத, இன வாத, தீவிரவாத சக்திகளை ஒருபோதும் இந்த அரசு வளரவிடாது. எந்தவொரு வன்முறையும் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழும். இவ்வாறு முதல்வர் பேசினார்.