கோவி.பால.முருகு
படிக்கும் போதேநீ பழகிக் கொள்ளணும்-வாழ்வில்
பிடிக்கும் துன்பமதைப் புரிந்து வெல்லணும்!
சாதிமத அரசியலை வெறுத்து ஒதுக்கணும்-அவை
தீதென்று ஒழித்திடவே முயற்சி செய்யணும்!
நாட்டை ஆளுகின்ற அரசியல் அறிந்துகொள்ளணும்-நல்ல
ஆட்சிதானா என்றுநீயும் ஆய்ந்து பார்க்கணும்!
உழவின் மேன்மையதை உரக்கப் பேசணும்-அதில்
உழவர் உயரும்நல் உறுதி இருக்கணும்!
தொழிலாளி வர்க்கத்தின் உயர்வைப் பேசணும்-அவரை
ஒழிக்கின்ற முதலாளி வர்க்கம் கூசணும்!
கல்விக் கூடமெல்லாம் அரசே ஆளணும்-அங்கே
கல்வி வியாபாரிகள் கடையை மூடணும்!
தாராள தனியார்மயம் தடுத்து நிறுத்தணும்-நாட்டின்
பிணியாம் கொள்கையது மிரண்டு ஓடணும்!
படிப்போடு பல்லறிவும் பெற்றிட வேண்டும்-அந்த
பிடிப்போடு நாளும்மிக உயர்ந்திட வேண்டும்!