இலவச குடிமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுத்திடுக!
ஓலையூர் கிராம மக்கள் கோரிக்கை
அரியலூர், ஜுன் 22- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே, ஓலையூர் கிராமத்தில் தலித் மக்கள் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், நான்கு தலைமுறையாக, 3 முதல் 4 குடும்பத்தினர் என போதிய இடமின்றி வசித்து வருகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஆண்டிமடம் ஒன்றியத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தின்போது, ஓலையூர் கிராம மக்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் 3 முதல் 4 தலைமுறைகளாக ஒரே வீட்டில் மூன்று முதல் நான்கு குடும்பங்களாக வசித்து வருவதாகவும், இடவசதி இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், இதுகுறித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்து பேசினர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இளங்கோவனிடம் முறையிட்டு, தங்களுக்கு குடியிருக்க இலவச குடிமனை பட்டா பெற்றுத்தருமாறு, அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறி மாவட்டச் செயலாளர் இளங்கோவன் மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அதுசம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் இதுகுறித்துப் பேசினார். மேலும், அதே பகுதியில் சர்வே எண் 183 - G இல் உள்ள 3 ஏக்கர் காலியாக உள்ள தரிசு நிலத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதில், சிபிஎம் வட்டச் செயலாளர் எம். வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. பரமசிவம், டி. அம்பிகா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர். இளவரசன், ஆர். செந்தில்வேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.