tamilnadu

img

வேதாந்தா விசுவாசி மோடி

மதுரை, டிச. 15 - டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்டம் மேலூரில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாபெரும் போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. பேசியதாவது: “டங்ஸ்டன் சுரங்க உரிமத்தால் என்ன நடக்குமோ என்ற பயம் மக்களுக்கு இருந்துகொண்டிருக்கிறது. எப்படியும் நடத்திவிடலாம் என்ற துணிவு மோடிக்கு இருக்கிறது. கடந்த மாதம் நவம்பர் 19ஆம் தேதி முதன்முதலில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஓர் அறிக்கை வெளியிட்டோம். டங்ஸ்டன் திட்டத்தினால் ஏற்படக்கூடிய பிரச்சினை கள் பற்றி, இதன் அபாயத்தைப் பற்றி வெளியிட்ட அறிக்கை அது. இதற்கு முன்பு ஒன்றிய அரசினுடைய ஒரே ஒரு செய்திக்குறிப்பு மட்டும் இருந்தது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தாவுக்கு, இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது என்று செய்திக்குறிப்பு - அதைத் தாண்டி எந்த விவரமும்  அந்தச் செய்திக்குறிப்பில் இல்லாமல் இருந்தது. அதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த ஏலம் விடப்பட்ட பகுதி நாயக்கர்பட்டி பிளாக் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இங்கேதான் இந்தச் சதி எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

மேலூர் பகுதி என்று சொன்னால் எல்லோ ருக்கும் தெரியும். அரிட்டாபட்டி என்று சொன்னால் இந்த ஊருக்கே தெரியும். மதுரைப் பகுதி என்று சொன்னால் நாட்டுக்கே தெரியும். ஆனால் வெறும் நாயக்கர்பட்டிப் பகுதி என்று இருந்தது. அது தூத்துக்குடி மாவட்டமா? கோவை மாவட்டமா என்ற எந்த விவரமும் இல்லை. அந்த அறிக்கைக்கு உள்ளே போய் அந்த ஒப்பந்தத்தை முழுவதுமாகப் பார்த்தால்தான் தெரிகிறது. முழு விவரம் இருக்கிறது. அரிட்டாபட்டி என்ற சொல்லையோ, மேலூர் என்ற சொல்லையோ திட்டமிட்டுத் தவிர்த்திருக்கிறார்கள். யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தவிர்த்துள்ளார்கள்.  அதைவிட முக்கியமானது, இது குறித்த வரைபடம் வெளியிடப்படவில்லை. அந்த வரை படத்தை வரைந்ததே எங்கள் அலுவலகத்தில் உள்ள  தோழர்கள்! நாங்கள் அனைவரும் சேர்ந்து அந்த வரைபடத்தைத் தயார் செய்தோம். தற்போது பல ஊடகங்களிலும் சிவப்புக் கோட்டால் வரையப்பட்ட அந்த வரைபடத்தைப் பயன்படுத்துகிறார்களே, அந்த வரைபடத்தை உருவாக்கியது நாங்கள்தான். ஒன்றிய அரசு எதையெல்லாம் மறைக்க நினைத்ததோ, அதையெல்லாம் மக்களுக்குச் சொல்வதுதான் எங்களுடைய வேலை! எங்களது கடமை!” “எமது முதல் கோரிக்கை - ஒன்றிய அரசு இந்த  ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்; இரண்டா வது கோரிக்கை - தமிழக அரசு இந்தச் சுரங்க ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது.

+அமைச்சகச் செயலாளரிடம்  மூன்று கேள்விகள்

ஒன்றிய சுரங்க அமைச்சர் கிஷன் ரெட்டியை, 27ஆம் தேதி சந்தித்தேன். அவர் அந்தத் துறையின் செயலாளரை அழைத்து இது சம்பந்தமாக விவாதிக்கச் சொன்னார். அந்த அதிகாரியிடம் மூன்று கேள்விகள் கேட்டேன்.  ஒன்று - தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தொல்லியல் சின்னங்கள் இருக்கிற ஒரு இடத்தை எப்படி ஏலம் விட்டீர்கள்? இரண்டு - தமிழக அரசு பல்லுயிர்ப் பாரம்பரியத் தளம் என்று அறிவித்த ஓர் இடத்தை எப்படி ஏலம் விட்டீர்கள்? மூன்றாவது - ஒரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. இருக்கிற தொகுதியில் இப்படியொரு சுரங்கத்தைத் தனியார் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று தோண்டிவிட முடியும் என்று எந்த நம்பிக்கையில் ஏலம் விட்டீர்கள்? இந்தியாவில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் ஏலம் விடலாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.ஆக இருக்கக்கூடிய ஒரு இடத்தில் வேதாந்தா நிறு வனத்திற்கு ஏலம் விட்டு அந்தச் சுரங்கத்தை நடத்தி விடலாம் என்று நம்பியவர் யார் என்றும் கேட்டேன். நீண்ட விவாதத்திற்குப் பின்னர் அமைச்சரும், அதிகாரியும் ஒருமித்த கருத்தாகத் தெரிவித்தார்கள். ‘உங்கள் கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம். மக்கள் பயப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள்’ எனக் கூறினார்கள். அடுத்த நாள் தமிழக முதல்வர் அவர்கள் ஒரு விரி வான அறிக்கை வெளியிட்டார். கடிதம் அனுப்பி னார். அந்தக் கடிதத்திற்குக் கனிமவள அமைச்ச கம் அதிகாரப்பூர்வத் தளத்தில் பதில் ஒன்று வெளி யிட்டது. தொல்லியல் சின்னங்கள், பல்லுயிர்ப் பகுதி யினைப் பாதுகாத்துக்கொண்டே இந்தச் சுரங்கத் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக மழுப்பியது அந்தப் பதில். எங்களுக்குத் தெரியும் - மோடிக்கு வேதத்தின் மீது இருக்கிற விசுவாசத்தை விட வேதாந்தா நிறுவனத்தின் மீது விசுவாசம் அதிகம் என்பது.” நாடாளுமன்றத்தில் கேள்வி “டிசம்பர் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நான்  பேசினேன். கீழடியில் 10 அடி குழி தோண்ட அனு மதிக்காத மோடி அரசு, அரிட்டாபட்டியில் ஒரு சுரங்கமே தோண்டுவதற்கு எப்படி அனுமதி கொடுத் தீர்கள் என்று கேட்டேன். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி. ஹரிச்சந்திர மீனா, மேலூர் போல் இந்தியாவில் எத்தனை இடத்தில் ஏலத்தை விட்டுள் ளீர்கள் என்று பட்டியல் கேட்டார். 

இந்தப் பிரச்சினை இப்பொழுது மேலூரில் இருந்து ராஜஸ்தான் வரைக்கும் சென்றுவிட்டது. அத னால் ஒன்றிய அரசு வேறு வழியில்லாமல் பட்டியல் வெளியிட்டனர். அதில்தான் 48 இடத்தில் 8 இடம் தமிழ்நாட்டில், 4 இடம் ராஜஸ்தானில், 48 இடத்தில் அரிதிலும் அரிதான கனிமங்கள் இந்தியாவில் இருக்கிறது. 4 தடவை ஏலம் விடப்பட்டது. அதில் 24 ஏலங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் இரண்டு இடத்தில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. அதில் மேலூரில் மட்டும் டங்ஸ்டன் இருக்கிறது. இதுதான் நாயக்கர்பட்டி பிளாக் என்று சொல்லப்படுகிறது. இந்த இடத்தில்தான் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறது. இது மிக முக்கியமான விஷயம்! இது நான்கா வது தொகுதி ஏலம். இதற்கு முன்னால் மூன்று தொகுதி ஏலம் விடப்பட்டுள்ளது. அதில் எல்லாம் இந்தியாவில் பிரச்சினையே ஏற்படவில்லை. வாங்க வேண்டியதை வாங்கிச் சத்தம் இல்லாமல் முடித்து விட்டார்கள். மூன்று முறை ஏலம் விட்டுள்ளார்கள். யாருக்கும் தெரியாது! நாடாளுமன்றத்துக்கே தெரியாது! நாட்டு மக்களுக்குத் தெரியாது. 25 சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டுவிட்டது. 26வது சுரங்கம் அரிட்டாபட்டிச் சுரங்கத்தைக் கை வைக்கிற பொழுதுதான் ‘ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்’ என்று பல்வேறு கட்டப் போராட்டம் நடைபெற்றது.”

மேலூர் மக்களைக் காப்போம்!

“அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், அழகர்கோவில், வல்லாளப்பட்டி, மேலூர், மதுரை என பல்வேறு இடங்களில் எல்லாக் கட்சிகளும், எல்லா அமைப்பு களும், எல்லா இயக்கங்களும் சேர்ந்து போராட்டங் களை நடத்தினர். கட்சியாகப் பிரிந்திருக்கலாம், கொள்கையாகப் பிரிந்திருக்கலாம். இந்த மண்ணைக் காக்கிற போராட்டத்தில் நம்மிடம் பிரிவினை இல்லை என்பதை உரக்கச் சொல்லு கிறோம். 25 இடத்தில் ஏலம் விட்டதை யாரும் கேட்க வில்லை. யாரும் அதைக் கேட்டுச் சாலையில் உட்கார்ந்து போராடவில்லை. அப்படிக் கேட்கிற துணிச்சல் கொண்ட மண் தமிழ்நாட்டு மண், மதுரை  மண், மேலூர் மண் என்பதை நாம் நிரூபித்திருக் கிறோம். டங்ஸ்டன் சுரங்கம் தோண்டுவதால் எந்தவிதக் கழிவுகள் வெளியேறுகிறது, எவ்வளவு பேருக்குப் புற்றுநோய், மாரடைப்பு, பல்வேறு நோய்கள் வந்துள்ளது என்று நம்மால் பார்க்க முடிகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேலூர் மக்கள் மிகப்பெரிய பலத்தோடு எங்களை ஆதரித்ததற்குப் பல முக்கியக் காரணங்கள் உள்ளன. அதற்கு முக்கியமான காரணம் - இந்த மாவட்டத்திலே விபத்துகளில் அதிகமான மக்கள் இருந்தது மேலூரில்தான்.  நான்கு வழிச் சாலையில் 5 வருடங்களுக்கு முன்னால் பாலமே இல்லாமல் இருந்தது. ஒரு மாதத்திற்கு 31 விபத்துகள் நடந்தன. அதில் 21 பேர் இறந்தனர். கடந்த முறை எம்.பி.ஆக இருந்தபோது மூன்று முக்கிய இடங்களில் ஒன்றிய அமைச்சரைச் சந்தித்துப் பாலம் போடுவதற்கு அனுமதி பெற்று பாலம் அமைக்கப்பட்டது. அதனால் விபத்துகள் 31இல் இருந்து 14ஆகக் குறைந்துள்ளது. நாங்கள் விபத்துகள் நேராமல் குறைப்போம். ஆனால் ஒன்றிய அரசாகிய நீங்கள் சுரங்கம் தோண்டி மக்க ளைப் பல்வேறு வகையான நோய்த் தாக்குதலுக்கு உள்ளாக்கிச் சாகடிக்க நினைத்தால் அதனைப் பார்த்துக்கொண்டிருப்போம் என்று நினைத்தீர்களா?” 3600 வருடங்கள் “ஏலம் விடப்பட்ட ஆவணங்களில், சுரங்கம் தோண்டுவதாகச் சொல்லுகிற இடத்தில் நிலத்தின்  வகைபாடு என்ன? குளங்கள், ஏரிகள் இருக்கிறதா? மூன்று போகங்கள் விளைச்சல் இருக்கிற நிலமா? நஞ்சையா, புஞ்சையா? என்கிற விவரம் வேண்டுமல்லவா! எதுவுமே கிடை யாது. இவையெல்லாம் சொன்னால் மாட்டிக் கொள்வார்கள். அதனால் சொல்லவில்லை. 

இந்தியாவிலே அசோகர் காலத்துக் கல்வெட்டு 2300 வருடங்களுக்கு முன்னர் பழமையானது. அசோகர் காலத்துக் கல்வெட்டை விடப் பழமையானது அரிட்டாபட்டிக் கல்வெட்டு! 1856ஆம் ஆண்டு அக்கல்வெட்டைக் கண்டுபிடித்தார். அது பிராகிருத மொழி என நினைத்துப் படித்துப் பார்த்தார். அவரால் முழுமையாக வாசித்து அறிய முடியவில்லை. அதன் பின்னர் 1924ஆம் ஆண்டு தொல்லியல் அறிஞர் கே.வி.சுப்பிரமணியம் வந்து கண்டுபிடித்தார். ‘இது பிராகிருதம் அல்ல, தமிழ்! இதுதான் பழமையான தமிழ்’ என்று  முதன்முதலில் படிக்கப்பட்ட கல்வெட்டு மீனாட்சி புரத்தில் இருக்கக்கூடிய கல்வெட்டு! இந்தியா விலேயே முதல் கல்வெட்டு. அதனை அழிக்க விட்டுவிட்டால் இந்த ஊரில் நாம் வசிப்பதற்குத் தகுதியான மனிதர்களா என்று வரலாறு நம்மைக் கேள்வி கேட்கும். இமயம் என்ற பெயர் அரிட்டாபட்டிக் கல்வெட்டில் உள்ளது. 3600 வருடத்திற்கு முன்னால்  இமயத்தை அறிந்துள்ளார்கள். இந்தியாவை இமயம் காப்பதுபோல, இமயம் என்று எழுதப்பட்ட அரிட்டாபட்டி நிலத்தை நாங்கள் பாதுகாப்போம்!

இரண்டு சூழ்ச்சிகள்

இந்தச் சுரங்க ஏலத்தில் இரண்டு சூழ்ச்சிகள் இருக்கின்றன. நமது வளங்களையும், வரலாற்றையும் ஒருசேர அழிக்கிற முயற்சியைச் செய்கிறது ஒன்றிய அரசு. தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. கிராம சபைகள் அனைத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதற்கு மேல் ஜனநாயக நாட்டில் வேறு என்ன செய்ய வேண்டும்!” “கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்தபோது, அதுவரை இந்தக் கனிமத்தை ஏலம் விடுகிற அதிகாரம் தமிழ்நாடு அரசின் கையில் இருந்தது; அதைப் பறித்தார்கள். தனியாரிடம் ஒப்படைத் தார்கள். அதுவரை அரசுதான் ஏலம் எடுக்க முடியும். தனியாருக்குக் கொடுக்கும் சட்டத்தை வெளி யிட்டார்கள். அதானிக்காகவே இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.  அப்போது நாங்கள் உரக்கக் குரல் கொடுத்தோம் - இந்தச் சட்டத்தைக் கொண்டுவரக்கூடாது என்று! ஜூலை 26ஆம் தேதி சட்டம் தாக்கல் செய்யப்பட்டு 28ஆம் தேதி விவாதமே இல்லாமல் ஒன்றிய அரசு நிறைவேற்றியது. அப்போது நாடாளு மன்றத்தில் 48 பேர் குரல் ஒலித்தது. இன்று நாடே ஒலித்துக்கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் எதிரொலிக்கிறது. மக்கள் மன்றத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.  இது கொள்கைப் பிரச்சினை. இந்தியாவின் வளத்தை, நிலத்தை, காற்றை, கனிமத்தை, மக்கள் சொத்துக்களைத் தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.”  இவ்வாறு அவர் பேசினார்.