ஒன்றிய அரசின் கீழ் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் நிலுவையில் உள்ள எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கான காலி இடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்று ஒன்றியக் கல்வி அமைச்சருக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்களில் நிரப்பப்படாத எஸ்.சி/எஸ்.டி/ஓ.பி.சி பணியிடங்களை, பொதுப் பணியிடங்களாக மாற்றும் யுஜிசி-யின் புதிய வரைவு நெறிமுறைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்ததை அடுத்து, ஒன்றிய அரசு அதிலிருந்து பின்வாங்கியுள்ளது. இந்த நிலையில், கடும் கண்டனங்களுக்கு பிறகு கல்வி அமைச்சகத்தின் விளக்கம் போதாது என்றும், வரைவை தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயர்கல்வி நிறுவனங்களில் நிலுவையில் உள்ள எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கான காலி இடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்று ஒன்றிய கல்வி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
"இட ஒதுக்கீட்டுக்கு எதிரான யு.ஜி.சி வரைவு. எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி நிலுவை காலி இடங்கள் பொதுப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்படாது என கடும் கண்டனங்களுக்கு பிறகு கல்வி அமைச்சகம் ட்வீட் விளக்கம்.
விளக்கம் போதாது. வரைவை தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை. உடனடியாக நிலுவை காலி இடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.