உங்களின் செயல்களாலேயே நீங்கள் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள் என்று ஒன்றிய அரசை சு.வெங்கடேசன் எம்.பி விமர்சித்துள்ளார்.
எல்.ஐ.சி இணையத்தள முகப்பை இந்தியில் மாற்றியது, நாடாளுமன்றத்தில் எம்.பி-க்களின் எழுப்பும் கேள்விகளுக்கு ஒன்றிய அமைச்சர்கள் இந்தியில் பதில் அனுப்பியது என்பன உள்ளிட்ட ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு செயல்பாடுகளுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகிறார். உங்களின் செயல்களாலேயே நீங்கள் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள் என்று ஒன்றிய அரசை சு.வெங்கடேசன் எம்.பி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"ஒன்றிய அமைச்சர்கள் இந்தியில் பதில் அனுப்பியதற்கு எதிராக வழக்குத்தொடுத்தால் “அலுவலகத் தவறு” என்பதும் அரசு நிறுவனங்கள் இந்தியைத் திணிப்பதற்கு எதிராகக் கண்டனம் வந்தால் “தொழில்நுட்பத் தவறு” என்பதும் முதன்முறையல்ல.
இச்செயல்களுக்கு நேர்மையோடு பொறுப்பேற்க முடியாது. ஏனென்றால் இந்தியைத் திணிக்க நேர்மையற்ற வழி மட்டுந்தான் இருக்கிறது. உங்களின் செயல்களாலேயே நீங்கள் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.