tamilnadu

ஆய்வு பொருட்கள், புத்தகங்கள் வாங்கிய வழக்கு தள்ளுபடி

மதுரை, ஏப்.27-2018-19ம் கல்வியாண்டில் ஆய்வு பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவது தொடர்பாக நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கக் கோரிய வழக்கை பொதுநல வழக்காக தொடர முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளைமதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில்," தமிழகம் முழுவதும் சுமார் 6362 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் பயில்கின்றனர். ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின்கீழ் தமிழகத்திலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆய்வக பொருட்கள் மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கு என மத்திய அரசு தொகையை ஒதுக்குகிறது. ஆய்வு பொருட்களுக்கு என பள்ளி ஒன்றுக்கு 45 ஆயிரம் ரூபாயும், நூலகத்திற்கு புத்தகங்களை வாங்குவதற்கு என 5000 ரூபாயும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த தொகை முறையாக செலவிடப்படுவதில்லை. இந்த பொருட்களை வாங்குவதற்காக டெண்டர் வெளிப்படையாக நடைபெறுவதில்லை. தரம் குறைந்த ஆய்வக பொருட்கள் மற்றும் புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன. இந்த நிகழ்வில் பெரும் முறைகேடு நடைபெறுகிறது. இதில் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆகவே தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2018-19 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட ஆய்வக பொருட்கள் மற்றும் நூலக புத்தகங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும். இனி வரும் கல்வியாண்டுகளில் ஆய்வக பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவது தொடர்பாக வெளிப்படையான டெண்டர் முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும். 2018-19ஆம் கல்வியாண்டில் ஆய்வு பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்கியது தொடர்பாக நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த வழக்கை வெள்ளியன்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு, இதனை பொதுநல வழக்காக தொடர முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

;