tamilnadu

img

முதல்வரிடம் பரிசு பெற்ற மாணவி ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை

சிவகங்கை அருகே ஆன்லைன் வகுப்பு புரியாததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
சிவகங்கை அருகே செல்லப்பனேந்தலைச் சேர்ந்த சத்திய மூர்த்தியின் மகள் தனலெட்சுமி என்ற சுபிக்ஷா. இவர் மதுரையில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றார். ஆனால் ஆன்லைன் வழியாக நடத்தப்படும் பாடங்கள் புரியாததால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். பெற்றோரிடம் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் பாடம் புரியவில்லை என்றும் வருந்தி உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து திருப்புவனம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
படிப்பில் சிறந்து விளங்கிய மாணவி சுபிக்ஷா பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு மதுரையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதல் பரிசைப்பெற்ற சுபிக்ஷாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
நீட் தேர்வு அச்சம், ஆன்லைன் வகுப்பு பிரச்சனைகளால் மாணவர்கள் தற்கொலை செய்வது தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழலில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.