tamilnadu

img

மாணவி ரபிஹாவிற்கு அநீதி இழைக்கப்பட்ட விவகாரம்... குடியரசுத் தலைவர் தலையிட சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை

மதுரை:
புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபிஹாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்ட விவகாரத்தில் குடியரசுத்தலைவர் தலையிட்டு, அவருக்கு ஏற்பட்ட இழிவை துடைக்க முன்வர வேண்டும் என்று மதுரைமக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர், குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: டிசம்பர் 23-ஆம் தேதி நடைபெற்ற புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தாங்கள் கலந்துகொண்டீர்கள். அதே விழாவில் ரபிஹா அப்துரஹிம் என்கிற மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். 

தங்கப்பதக்கம் வென்ற அந்ததொடர்பியல் துறை மாணவி, நீங்கள் நுழைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டிருக்கிறார். நீங்கள் வெளியேறிய பிறகே மீண்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு காரணம் தனது தோற்றம்தான் என்று ரபிஹா  சரியாகவே நம்புகிறார். எல்லா விதமான தேர்வுகளுக்கான சுதந்திரமும் உரிமையும் உள்ள ஒரு நாட்டில் ஹிஜாப் அணிந்தார் என்பதற்காக ஒரு இந்திய பெண்தனிமைப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

“வன்முறையில் ஈடுபடுபவரை அவரது உடைகளை வைத்தே அடையாளம் காண முடியும்” என்று பிரதமர் சொன்னதன் நேரடி விளைவாகவே இந்த சம்பவத்தை பார்க்கவேண்டியிருக்கிறது. ஒரு சமூகத்தையே இப்படி இழிவுபடுத்துவதன் மூலம் இந்த நாட்டின் எதிர்காலமாகவும் நம்பிக்கையாகவும் ஒளிரும் ரபிஹா போன்றவர்களை  அவர்களது உடைகளை வைத்து அவமானப்படுத்தும் செயல் இங்கு சாதாரணமாக அரங்கேறுகிறது.ரபிஹாவுக்கு ஏற்பட்ட இந்த இழிவை துடைக்க தாங்கள் முன்வரவேண்டும் என்று  ஒரு நாடாளுமன்றஉறுப்பினராக நான் கோருகிறேன். ரபிஹாவிடம் வருத்தம் தெரிவிப்பதன் மூலம் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் ஒரு ஆரோக்கியமான செய்தியை நீங்கள் விடுப்பீர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் மறுத்த தங்கப்பதக்கத்தை நீங்கள் ரபிஹாவுக்கு வழங்கமுன் வர வேண்டும். சமத்துவத்தில் நம்பிக்கையுள்ள மதச்சார்பற்ற குடிமகனாகிய நான்  விடுக்கும் இந்தகோரிக்கைகளை நீங்கள் நல் நோக்கத்தோடு பரிசீலித்து ஆவன செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

மேலும் புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணியுங்கள் என்ற  மாணவர் பேரணியின் அழைப்பை ஏற்று பதக்கங்களையும், பட்டங்களையும் பெற மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்து அதை செயல்படுத்திய மாணவிகள் கார்த்திகா குரூப், சமீரா அன்வர், மேகலா, ஆராய்ச்சி மாணவர் ஏ.எஸ்.அருண்குமார் ஆகிய நான்கு பேரது துணிச்சல்மிக்க செயலை பாராட்டியுள்ள சு.வெங்கடேசன் எம்.பி., இந்தமாணவர்கள் பழிவாங்கப்படக்கூடாது என்றும்  வலியுறுத்தியுள்ளார்.

;