மக்கள் மொழியில் தான் சட்டங்களும், நீதிபரிபாலனமும் இருக்க வேண்டும் எனவும் மொழி ஆதிக்கத்திற்கு எதிராகவும், தங்கள் தாய் மொழியின் உரிமைகளைக் காக்கவும் மக்கள் உலகெங்கும் போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்கள். இந்தியாவில் இன்று நாம் நீதிமன்றங்களில் ஆங்கில மொழி பயன்பாட்டால் எதிர்கொள்ளும் பிரச்சனையை ஆங்கில மொழி இங்கிலாந்தில் 14 ஆம் நூற்றாண்டில் எதிர்கொண்டது. இங்கிலாந்து நீதிமன்றங்களில் அன்றைக்கு லத்தீன் மொழி பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் 1362ம் ஆண்டு இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் வாதாட சட்டம் போடப்பட்டது. ஆங்கிலத்தில் வாதாடினால் வருமானம் கிடைக்காது என்று அச்சப்பட்டு பலரும் ஆங்கிலத்தில் வாதாட முன் வரவில்லை. லத்தீன், பிரெஞ்சு மொழி பயன்பாட்டிற்கு எதிராக இங்கிலாந்தில் நூற்றாண்டுகளாக நடந்த தொடர் போராட்டத்தின் விளைவாக 1731 ல் லத்தீன் மொழி தடுப்பு கொண்டு வரப்பட்ட பிறகே இங்கிலாந்தின் வெகு மக்கள் மொழியான ஆங்கிலம் இங்கிலாந்து நீதிமன்றங்களில் ஒலிக்க துவங்கியது.
இந்தியாவில் இன்னும் ஆங்கிலம் ஏன்?
பல்வேறு தேசிய இனங்களும், மொழிகளும் பேசக்கூடிய இந்தியாவில் உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றங்களிலும் இன்னும் ஆங்கிலம் மட்டுமே நீதிமன்ற பயன்பாட்டு மொழியாக இருப்பது என்பது பெரு வாரியான மக்களின் மொழி உணர்விற்கும், உரிமைக்கும் எதிரான ஒரு நடைமுறையாகும். ஒரு தேசிய இனத்திற்கு பிரதான உரிமைகளில் ஒன்று மொழி உரிமையாகும். இந்தியாவில் மொழித் திணிப்பிற்கு எதிராக, மொழி உரிமைக்கான போராட்ட வரலாற்றில் தமிழ் மொழிக்கு ஒரு நீண்ட நெடிய பங்குண்டு. சமஸ்கிருத, இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக கடந்த பல நூறு ஆண்டுகளாக தமிழ் மொழி போராடி வந்துள்ளது. தமிழின் தவிப்பு தமிழ் மொழி தனக்கே உரிய தனித்துவமான இலக்கணமும், சிறப்பான இலக்கியங்களும் கொண்டு முத்தமிழிலும் முத்திரை பதித்து, உலகின் மூத்த மொழியாக வளர்ந்து, இன்றைக்கு வளர்ந்து வரும் தொழில் நுட்பம் , விஞ்ஞானம் மற்றும் புதிய இலக்கிய மரபுகளுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டு குன்றாத இளமையோடு வெகு மக்களின் மொழியாக இன்றும் இருக்கிறது. இத்தனை சிறப்புகளோடு, செவ்வியல் தன்மையோடு, செம்மொழியாக கொண்டாடப்படும் தமிழ் இன்னும் தமிழ்நாட்டு உயர் நீதிமன்றங்களில் நுழைய முடியாமல் தவிக்கிறது. குரல் கொடுத்த கம்யூனிஸ்டுகள் 1952 வரை மதராஸ் மாகாண சட்டமன்றத்தில் தமிழ் ஒலிக்க தடை இருந்தது. அன்றைக்கு ஆங்கிலத்திலேயே சட்ட மன்ற உரையாடல்கள் இருந்தன. மக்கள் மன்றத்தில் மக்களின் மொழி தான் ஒலிக்க வேண்டும் என்று முதன் முதலில் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர்கள் பி.ராமமூர்த்தியும், ஜீவாவும் தான். அதன் பிறகே மதராஸ் மாகாண சட்டமன்றத்தில் தமிழ் ஒலிக்க துவங்கியது. நீதிமன்றங்களில் தமிழ் ஒலிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை 168 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் அறிஞரும், அன்றைய ஆங்கிலேய நீதிமன்றத்தில் முன்சீப்பாக பதவி வகித்தவருமான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் குரலே முதன்மையான குரலாக பார்க்கப்படுகிறது. அவர் அக்காலத்திலேயே தமிழ் சட்ட அகராதியை உருவாக்கி மக்களுக்கு புரியும் மொழியில் நீதிமன்றங்களில் தமிழ் ஒலிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.
நீதிபெறுவதற்கான உரிமை
இந்திய குடிமக்களுக்கு நீதி பெறுவதற்கான உரிமை என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் சரத்து 21 ல் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு வழக்காடிக்கு தன் வழக்கின் முழுமையான நடைமுறையும் அந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பும் புரிந்து கொள்ளும் வகையில் அமைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலமே அது உத்தரவாதமாகும். ஒரு வழக்காடி தனக்குத் தெரிந்த மொழியில் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் வழக்காட உரிமை இருக்கிறது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்கள் வரை இந்த உரிமை வழக்காடிகளுக்கு தொடர்வதன் மூலமே அனைவருக்கும் நீதி பெறுவதற்கான உரிமை உத்தரவாதப்படுத்தபடும். உயர்நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கீழமை நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகள் வழக்காடு மொழியாக இருக்கின்றன. ஆனால் உயர்நீதிமன்றங்கள் வரை அந்தந்த மாநில மொழிகள் அலுவல் மொழியாக்கப்படும் போதுதான் ஜனநாயகத்தில் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
1965-முடிவு இன்றும் நீடிக்கலாமா?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 348(2) ன் படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது. இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் சம்மதத்தை பெற்று அமல்படுத்த வேண்டும் என்று 1965 ல் எடுக்கப்பட்ட அப்போதைய அமைச்சரவை முடிவு இன்று வரை நீடிக்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 348(2) ஐ மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள உரிமையை பரிப்பதாகவே இருந்து வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 348(2) பயன்படுத்தி 50 ஆண்டுகளுக்கு முன்னரே ராஜஸ்தான், அலகாபாத், மத்தியப் பிரதேசம், பாட்னா ஆகிய உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி அந்த மாநில மொழிகள் உயர்நீதிமன்றத்தின் மொழியாக அறிவிக்கப்பட்டது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும். ஆனால் இந்தி பேசாத பிற மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றகளில் அந்தந்த மாநில மொழிகளை அலுவல் மொழியாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை அமலாக்காமல் ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும் பாகுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றன.
நிராகரிக்கப்பட்ட தீர்மானம்
தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் நீண்ட காலமாகவே அந்த மாநில உயர்நீதிமன்றங்களில் தங்கள் தாய்மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. இந்த கோரிக்கை அந்தந்த மாநில மக்களின் ஜனநாயக உரிமை சார்ந்தது என்பதை புரிந்து கொள்ளாமல் நடைமுறைச் சிக்கல்களை காரணங்களாக கூறி உச்சநீதிமன்றம் கடந்த காலங்களில் இந்த கோரிக்கையை நிராகரித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உரிமை பிரச்சனையாக 2006 லேயே அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தமிழக அரசு நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. அப்போதைய குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகும் அதை நிறைவேற்ற போதுமான கட்டமைப்புகள் இல்லை என்று காரணம் கூறப்பட்டு உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. மேற்படி தீர்மானம் நிராகரிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கட்டமைப்பை உருவாக்குக இன்றைக்கு இதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றால் ஆங்கிலத்தில் உள்ள அனைத்து மையச் சட்டங்களையும் தமிழிலே மொழிப்பெயர்ப்பது, இதற்கு திறமையான போதுமான அளவிற்கு மொழிபெயர்ப்பாளர்களை நிரந்தரமாக பணியில் அமர்த்துவது, தமிழிலே சட்ட மென்பொருள்கள் உருவாக்குவது, குறிப்பெடுக்க தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தாளர்களை நிரந்தரமாக பணியமர்த்துவது, உச்சநீதிமன்ற தீர்ப்புகள், அனைத்து மாநில உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் சட்ட இதழ்கள் வழியே கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகள் மூலம் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவதற்கான கட்டமைப்பு வசதிகளை செய்ய முடியும். சட்டக் கல்லூரியிலேயே இதற்கான சிறப்பான பாடப் புத்தகங்களை உருவாக்க வேண்டும். தமிழ் வழி சட்டக் கல்விக்கும் அரசு முன்னுரிமை தர வேண்டும். இதற்கு ஒன்றிய மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்குவதன் மூலம் தான் மக்களின் நீண்ட கால கோரிக்கையை வென்றெடுக்க முடியும்.
நீதிபதி ரமணா அவர்கள்
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த போது, உயர்நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியை பயன்படுத்துவதன் மூலம் நீதி வழங்குவதை எளிமையாக்க வேண்டும் என்று கூறியிருந்தார். சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்கள் அனைத்து மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளதை அனைத்து தரப்பினரும் வரவேற்று உள்ளனர். சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்துகொண்ட இரண்டு கூட்டங்களில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேசி இருக்கிறார். அனனத்து மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் இருக்கும் நிலையில், உயர்நீதிமன்றங்களிலும் அந்தந்த மாநில மொழிகளை வழக்காடு மொழியாக சட்டப்பூர்வமாக அறிவிக்காமல் இருப்பது நியாயமில்லை. மதுரையில் சிறப்பு மாநாடு இந்நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகவும், அலுவல் மொழியாகவும் கொண்டு வர வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் நீண்ட காலமாக கோரி வருகிறது. உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும் என்கிற தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் பிப்ரவரி, 24, 2024 சனிக்கிழமை மதுரையில் சிறப்பு மாநாடு நடைபெறுகிறது.