செல்வகதிரவன்
அதிகாலை ஆறுமணிக்கு அன்றைய செய்தி இதழ்களை வாசிக்கத் துவங்கி விடுவது வரதராஜனின் வழக்கம். நாளிதழ்களை அவர் வாசித்து முடிப்பதற்கும் நேரம் ஏழரையைத் தொடுவதற்கும் சரியாக இருக்கும். அந்தத் தனியார் தொலைக்காட்சி செய்திச் சேனலில் செய்தி விமர்சனங்களை கேட்பதற்காக என்றும் போல் இன்றும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு உயிர் கொடுத்தார் வரதராஜன். ஆர்வமாக செய்தி விமர்சனங்களைக் கேட்கத் தொடங்கினார். பேரன், பேத்திகள் இங்குமங்கும் ஓடித் திரிந்தார்கள். ‘போங்க.. போங்க.. வராண்டாவில போயி வெளையாடுங்க…’ சொல்லிவிட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மீது தனது கவனத்தைச் செலுத்தினார் வரதராஜன்.
ஏதிர்பாராதவிதமாக பேரன் பேத்திகளுக்குள் சண்டை வந்துவிட்டது. மாறி… மாறி… கையில் கிடைத்த பொம்மைகளை ஒருவர் மீது ஒருவர் வீசினார்கள்.
“யேய் என்னங்கடா…. இப்பிடிச் சண்ட போடுறீங்க.. போங்கடா போயி.. சண்ட போடாம திண்ணையில வெளையாடுங்க… என்ன இதுங்க இப்பிடி மொரட்டுத் தனமாக நடந்துங்கிடுதுங்க…”
ஓங்கிச் சத்தம் போட்டார் வரதராஜன். சமயலறையில் வேலையில் இருந்த மருமகள் மல்லிகா, “மாமா… எதுக்கு டென்சனாகிக் கத்துரீங்க…” என்றாள். அப்போது அங்கு வந்த கணவன் மனோகரனிடம் அவரைப் பற்றி ஆவலாதி சொல்வதும் வரதராஜனின் செவிகளில் விழவே செய்தன.
“ஏம்ப்பா… பிள்ளைங்க அடிச்சுக்கிடும்… அப்பறம் சேந்துக்கிடும்…நீங்க எதுக்குக் கத்துரீங்க… வயசான காலத்தில கிருஷ்ணா… ராமான்னு இருக்கிறத விட்டிட்டு… எதுக்கு கோபப்பட்டு ‘பிரசர’ ஏத்திக்கிடுறீங்க…? அமைதியா இருக்கப் பழகுங்க…அதுதான் ஒங்க ஒடம்புக்கு நல்லது..”
மனோகரன் சொன்ன வியாக்கியானங்கள் வரதராஜனின் மனதைக் காயப்படுத்தத் தவறவில்லை.
விருப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்த விமர்சன நிகழ்ச்சியில் இருந்து விடுபட்டு… தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு… வரவேற்பறைக்கு வந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்தார்.
“என்ன சொல்லிட்டேன்னு இப்பிடி கோபப்படுராங்க… சண்ட போடுற பேரன் பேத்திகள சத்தம் போடக் கூடாதா..? அதுகள கண்டிக்கிற உரிம தாத்தாவுக்குக் கெடையாதா…? வேலையில இருந்துதான் ரிடேயர் ஆகிட்டோமுன்னா… இந்த மாதிரி விசயங்கள்ல இருந்தும் ரிடேயராகி ஒதுங்கிக்கிடனுமா…? இல்ல கண்ணதாசன் பழைய பாடல் ஒண்ணுல எழுதி இருக்காரே.. ‘பெட்டியில பணமில்ல… பெத்த பிள்ள சொந்தமில்லன்னு’… அது நெஜந்தானா…?” என்கிற ரீதியில் வரதராஜனின் மனக்கடலில் கவலை அலைகள் விடமால் மோதின.
வீட்டருகில் இருக்கும் விநாயகரை வழிபட்டு விட்டு வந்தாள் காமாட்சியம்மமாள். எண்பது வயதைத் கடந்தவள்.. அறுபது வயது தொட்ட வரதராஜனின் தாயார். காலை வேளையில் கவலை படர்ந்து காட்சி தருகிற மகன் முகத்தைப் பார்த்ததும் அவளது மனதில் ஒருவித நெருடல் ஏற்பட்டது.
எந்த நேரத்திலும் வரதராஜன் சும்மா உட்கார்ந்திருப்பதை காமாட்சியம்மாள் கண்டதில்லை. பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்… இல்லை எதாவது புஸ்தகம் வாசித்துக் கொண்டிருப்பார்…இப்போது மகன் மௌனமாக அமர்ந்திருப்பது எதோ கவலையில் மூழ்கி இருப்பதாக காமாட்சிக்குத் தோன்றியது.
விநாயகர் கோயில் விபூதியை வரதராஜனின் நெற்றியில் பூசி விட்டு “என்னடா அய்யா… யேன்… ஒரு மாதிரியா இருக்க… என்ன சங்கதி..?” என்றாள் காமாட்சி.
“ஒண்ணுமில்லம்மா சும்மாதான் ஒக்காந்திருக்கேன்…”
“சும்மா சொல்லாதய்யா… எத்தன வயசானாலும் பிள்ள மனச புரிகிற சக்தி பெத்தவளத் தவிர யாருக்கும் இருக்காது.. என்ன பிரச்சன…?”
“பேரன் பேத்திங்க… ஒருத்தருக் கொருத்தர் சண்ட போட்டு கைகலப்பில் இறங்கப் பாத்துச்சுங்க… அந்தப் பிள்ளைங்கள அதட்டுனேன்.. அதுக்கு மகனுக்கும் மருமகளுக்கும் கோபம் வந்திருச்சு.. அமைதியா இருந்தா என்னப்பா.. மகன் அறிவுரை சொல்ல ஆரம்பிச்சிட்டான்…”
இதனைத் தெரிவிக்கிற போது வரதராஜனின் நா.. தழுதழுத்தது… வரவிருந்த அழுகையை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டார் வரதராஜன்.
“பக்குவம் பத்தலைய்யா… பொறும சகிப்புத் தன்ம இல்ல… ஊர் ஒலகத்தில கூட்டுக் குடும்பங்க சிதஞ்சு போனதுக்கு இந்த கோப தாபங்கள்தான் காரணம்… அந்தக் காலத்தில ஆச்சி, தாத்தா, மாமா அத்தைன்னு ஒண்ணா ஒரே குடும்பமா இருந்தோம்… நீ சின்னப் பிள்ளையில சேட்ட பண்ணும்போது… தாத்தா
எத்தன தட சத்தம் போட்டிருப்பாரு… அடிச்சிருக்காரு… அதக்காக என்னைக்காவது நா… கோபப்பட்டிருப்பேனா..? என்னயப் பெத்தவரு.. நா.. பெத்த பிள்ளைய கண்டிக்கிறதால நன்மதான் நடக்கும்.. தீம வந்திடாதுன்னு நெனச்சதால ஒன்னய ஏசும் போது எனக்கு கோபமே வந்ததில்ல… அந்தக் காலமெல்லாம் இப்ப மலையேறிப் போச்சுய்யா… தம்பி பிள்ளைய அண்ணன் கண்டிக்க முடியல…”
“…………………………………………………………………………………..”
“பைக்கு காரு கம்யூட்டரு செல்போன் வாசிங்மெசின் ஃபிரிட்ஜ் கீளீனர்னு சாமான்கள வாங்கிக் குமிக்கிறாங்க… அதப்பயன்படுதுற வித்தையையும் பழகிக்கிடுறாங்க… ஆனா மனுச மனசுகளப் புரிஞ்சு.. அன்பா பேசி சரியா நடந்து அத ஆபரேட் பண்ணுற தந்திரம் மட்டும் தெரியமாட்டேங்கிது…? என்ன செய்றது..?”
“………………………………………………………………………………….”
“இதுக்காக கவலப்படாத… செவிகள்ல விழுந்த வார்த்தைகள தேக்கி வைக்கக் கூடாது… தேவை இல்லாத சொற்கள செரிச்சிடணும்… ஒறவின் நிமித்தம் செரிச்சுத்தான ஆகணும்… அத நெனச்சுக்கிட்டே இருந்தா… அது மனசுல வண்டலாப் படிஞ்சு… கறைபட்ட பாத்திரமாகிப் போய்டும்… அப்பறம் அந்தப் பாத்திரத்தில எது நெரப்பினாலும்… கறைதான் தெரியும்… நல்ல நெனப்புக்கள அசை போடலாம்… மோசமான சங்கதிகள திரும்ப நெனைவுக்கு வராம நெஞ்சுக்குள்ளயே பூட்டிடணும்…”
அம்மாவின் அனுபவ மொழிகள் வரதராஜனின் நெஞ்சைத் தொட்டன. கவலைகள் மறந்து சகஜ நிலைக்கு மாறினார். அவர் முகத்தில் ஓடிய சோக ரேகை போன திசை தெரியவில்லை.