தமிழைத் தலைகீழாகக் கோர்த்து சரியாகப் பயின்றவர்
ஓர் இதழின் வரலாற்றில் ஒரு தொடர் கதைக்கு வாழ்த்தும் வசவும் மலைபோல் குவிந்தன. வசவுகள் வலிமையான வர்க்கத்தினரிட மிருந்து வந்தாலும், மேலும் அதை வளர்த்துக் கொண்டு எழுது என்று உற்சாகப்படுத்திய ஆசிரியரே “எப்போது நிறுத்தப் போகிறாய்?” என்று கேட்கும் அளவுக்கு அவரது எழுத்துக்கள் வீரியம் மிக்கதாய் இருந்தன. அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பவராக வேலைக்கு சேர்ந்து, தமிழைத் தலைகீழாகக் கோர்த்து, சரியாகப் பயின்று முற்போக்கு இலக்கியத்தின் தலைமகனாகப் பரிணமித்தவர் அவர். அச்சுக் கோர்ப்பாளர்களாக இருந்து பிரகாசித்த முன்னாள் அமைச்சர் என்.வி. நடராசன், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஆகியோரைப் போலவே பிரகாசித்தவர். அந்தக் காலத்திலேயே தன் எழுத்துக்கு 15 சதவீதம் ராயல்டி பெற்றவர். உழைப்பின் மேன்மையை உயர்த்திப் பேசிய தால் பலரின் எரிச்சலுக்கு உள்ளானவர். 59 வயதுக்குள்ளாக 150-க்கும் மேற்பட்ட சிறுகதை கள், 6 நாவல்கள், 7 திரைப்படங்களுக்கு வசனம். 10 சிறுகதைத் தொகுப்புகள், 3 கட்டுரைத் தொகுப்புகள் என தமிழில் எழுதிக் குவித்தவர். போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளையும், சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு மின்சார சிகிச்சை அளிக்கவும், மனித உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது ஏங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டியெழுப்பவும், மனிதாபி மானத்திற்கு விரோதமான மனித மிருகங்கள் மேல் வெறுப்பைக் கக்கி, மக்கள் நல்வாழ்விற்கு வழிதேட முயல்வதே என் எண்ணம்-என தனது எழுத்தின் நோக்கம் பற்றி பிரகடனப்படுத்தியவர். நம் உழைப்பின் மதிப்பைப் பெறுவதற்குத்தான் இன்று கடவுளுடன் போராடுகிறோம், மதத்துடன் போராடுகிறோம், கலையுடன் போராடுகிறோம். இந்தக் கடுமையான போராட்டத்தில் நாம் வீழ்ந்தா லும் சரி, நம் சந்ததிகளாவது வாழ வேண்டும் என்று முழங்கியவர். “வாசகர்களின் மன அமைதியைக் குலைக்கும் இயல்பு வாய்ந்த கதைகள்தான் உண்மையான இலக்கியம் என்றால், அவரின் சிறுகதைகள் உண்மையான இலக்கியம் என்பதில் ஐயமில்லை” என்று கல்கி கூறியது எத்தனை பொருத்தம். யார் அவர்? மகத்தான சக்தி படைத்த மனிதனை, முதல் இல்லாமல் கிடைக்கும் மலிவான பொருளாக பார்த்த முதலாளி வர்க்கத்திற்கு சவுக்கடி கொடுத்த “பாலும் பாவையும்” படைத்த முற்போக்கு இலக்கியத்தின் வீரிய வித்து. அவர் தான் விந்தன். செங்கல்பட்டு மாவட்டம், நாவலூரில் (திருக்கழுக்குன்றம் அருகே உள்ள கிராமம்) 1916ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வேதாசலம் - சானகியம்மாள் தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்து, நடுநிலைக் கல்வியைக் கூட முடிக்காமல் கருமானாக வேலை செய்து, பிறகு அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாக மாறியவர் விந்தன் (எ) கோவிந்தன். தமிழரசு. ஆனந்த போதினி, தாருல் இஸ்லாம், ஆனந்தவிகடன் ஆகியவற்றில் அச்சுக் கோர்ப்பவராக பணியாற்றி 1941-ஆம் ஆண்டு ‘கல்கி’ இதழில் பணியில் சேர்ந்தார் விந்தன். அச்சுக்கோர்ப்பில் சில கதைகளை திருத்தவும் செய்தார். ‘’எனக்கும் கடவுளுக்கும்தான் புரியும்” என்று கூறிய கல்கியின் வீணை பவானி சிறுகதையின் கையெழுத்துப் பிரதியை பிழை இல்லாமல் அச்சுக் கோர்த்தார். இதைக் கண்ட கல்கி, கோவிந்தனை அழைத்து ஒரு கதை கேட்க, வி.ஜி என்ற பெயரில் அவர் எழுதிக் கொடுத்தார். அதைப் படித்து, விந்தனின் மொழி நடையில் வியப்புற்ற கல்கி, கோவிந்தனின் பெயரை விந்தன் என மாற்றி துணையாசிரியராக பணியமர்த்திக் கொண்டார். 1946-இல் விந்தனின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு “முல்லைக் கொடியாள்” என்ற பெயரில் வெளிவந்தது. அந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதல் பரிசை அந்த நூல் வென்றது. இதுதான் விந்தன் பெற்ற ஒரே பரிசாகும். எழுத்தாளராக இருந்து அடுத்த கட்டமாக சினிமா துறைக்கு சென்றார். சுயமரியாதையின் சின்னமாக திகழ்ந்தவரால் அங்கு பிரகாசிக்க முடியவில்லை. சில படங்களுக்கு கதை, வசனம், பாடல் எழுதினார். சில படங்கள் வெற்றி பெற்றன. 1954இல் மனிதன் இதழை துவக்கினார். சினிமாவில் நிகழும் அவலங்களை இப்பத்திரிகை யில் தெருவிளக்கு என்ற தொடர் மூலம் வெளிச்சத் திற்கு கொண்டு வந்தார். இதனால் சினிமாத்துறை யினரின் கடுமையான விமர்சனத்திற்கு அவர் உள்ளானார். விரைவிலேயே அந்தப் பத்திரிகை நின்றுவிட்டது. 1955இல் மு.வ-வை கடுமையாக விமர்சித்து “எல்லார்க்கும் நல்லவர்”. “மனிதன் மாறவில்லை” என்ற சிறு கதைகள் எழுதி இலக்கிய அறிவு ஜீவி களின் கோபத்திற்கு உள்ளானார். ராஜாஜி எழுதிய “பஜகோவிந்தம்” நூலுக்கு மாற்றாக “பசி கோவிந்தம்” என எழுதி பிராமணர்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளானார். இப்படியாக திரைப் படத் துறையினர், தமிழறிஞர்கள், பிராமணர்கள் என அனைவரின் எரிச்சலுக்கும் உள்ளானார். இக்காலத்தில் விந்தனின் நெருங்கிய நண்பர் தமிழ்ஒளி, ஜெயகாந்தன், எம்.எஸ்.கண்ணன் போன்றோர் இருந்தனர். அச்சமயத்தில் புத்தகப் பூங்கா என்ற பதிப்பகத்தை உருவாக்கி, ஜெய காந்தன் எழுதிய கதைகளை தொகுத்து “ஒருபிடி சோறு” என்ற தலைப்பில் வெளியிட்டார். அந்த விந்தனின் நிழலில் வளர்ந்தவர்தான் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. இதே காலகட்டத்தில் திமுகவிற்குள் விந்தனை இழுக்க அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. எப்படியாவது விந்தனை தன் வழிக்கு கொண்டுவர முயற்சித்த அறிஞர் அண்ணா, 1967-ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டின்போது, அவர் பெயரால் உருவான அண்ணா நகரில் விந்தனுக்கு வீட்டுமனை ஒதுக்க முன் வந்தபோது அதனை அவர் ஏற்க மறுத்தார். 8 குழந்தைகளை கொண்ட ஒரு பெரிய குடும்பத்தை நிர்வகித்து, பல போராட்டங்களை சந்தித்த அவரின் வறுமையைப் போக்க அவரது நண்பர்கள் மணிவிழா கொண்டாட ஏற்பாடு செய்தனர். அதற்கு சில மாதங்களுக்கு முன் 1975 ஜூன் 30 அன்று அவர் காலமானார். விந்தன் பெயரில் அவரது நான்காவது மகன் ஜனார்த்தனன் நடத்திவரும் அறக்கட்டளை ஹாரிங்டன் சாலைக்கு ‘விந்தன் சாலை’ என்று பெயரிட வேண்டும் என்று கோரி வருகிறது. அந்த காலத்திலேயே உழைக்கும் மக்களை, வியர்வையின் புனிதத்தை உயர்த்திப் பேசிய, எழுதிய விந்தனின் பெயரை அச்சாலைக்கு சூட்டினால் அது அவரை மட்டுமல்ல உழைக்கும் மக்களையும் பெருமைப்படுத்துவதாக அமையும். - செ.கவாஸ்கர்