திருவனந்தபுரம், ஜன. 8- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13வது தேசிய மாநாட்டின் ஒரு பகுதியாக, ‘அரசு பயங்கரவாதமும் இந்தியாவின் நிகழ்காலமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருவனந்தபுரம் காந்தி பார்க்கில் நடந்த கருத்தரங்கிற்கு பி.கே.ஸ்ரீமதி தலைமை வகித்தார். கருத்தரங்கை துவக்கி வைத்து டீஸ்டா செதல்வாத் பேசுகையில், சட்டப் பேரவையில் தீர்மானம் உட்பட பலவழி களில் குடியுரிமை (திருத்த) சட்டத்தை எதிர்த்ததற்காக கேரளா வைப் பாராட்ட வேண்டும் என்றார். ஆவணமற்ற புலம்பெயர்ந் தோரின் திருமணம் மற்றும் குழந்தைகளை உட்படுத்தும் குடி யுரிமை என்பது இந்தியாவில் ஒரு பிரச்சனையாக உள்ளது. குடியுரிமைப் பதிவேடு தொடர்பாக தற்போதுள்ள புகார்களை தனித்தனியாக தீர்த்துவைக்க 200 ஆண்டுகளுக்கும் மேலாகும். இந்தப் பிரச்சனைக்கு அரசியல் மற்றும் சட்டரீதி யான தீர்வுதான் தேவை என்றும் அவர் கூறினார். ‘‘இன்று இந்தியாவில் எதிர்ப்புக் குரல்கள் சிறையில் அடைக்கப்படுகின்றன. அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களும் வேட்டையாடப்படுகின்றனர். இந்த இக்கட்டானச் சூழ்நிலையில் அற்புதமாக போராடிய விவசாயிகள் ஒரு துணிச்சலான உதாரணம். இதற்கு தலைமை தாங்கிய பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன்’’ என்றும் டீஸ்டா கூறினார். டீஸ்டா, சிறையில் தனது மோசமான அனுபவங்களை நினைவு கூர்ந்தார். மனித உரிமை மீறல்கள் எதுவும் நடை பெறாமல் இருப்பதை உறுதி செய்ய சிறைகள் மற்றும் காவல் நிலையங்களில் கடுமையான கண்காணிப்பு தேவை என்றும் கூறினார்.
அரச பயங்கரவாதத்தின் கருவியாக மாற்றப்படும் மதம் : எம்.ஏ.பேபி
‘‘அரச பயங்கரவாதமும் இந்திய நிகழ்காலமும்’’ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, ‘‘பாசிச சக்திகள் பிற மதத்தின ரைக் கொல்வதற்கு மதத்தை வெறுப்புப் பிரச்சாரத்தின் கருவி யாகப் பயன்படுத்துகின்றன. இது அரச பயங்கரவாதத்தின் மிகவும் இழிவான தன்மையாகும். அரசு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்பவர்கள் கூட பிணை யில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்’’ என்றார். ‘‘ஐந்தரை லட்சம் ஆண்களும், பெண்களும் நாட்டின் சிறைகளின் இருளில் வாடுகின்றனர். இவர்களில் முக்கால்வாசி பேர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. ஆனாலும், ‘உபா’ சட்டத்தின் கீழ் விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த மனிதாபி மானமற்ற மற்றும் கொடூரமான சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 1 முதல் 6 சதவிகிதம் பேர் மட்டுமே இதுவரை தண்டனை பெற்றுள்ளனர். மதச்சார்பற்ற நாடான இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், ஒரு மதவாத அரசு நிறுவனத்தை வழிநடத்தும் மிக மோசமான சூழ்நிலையை நாடு கடந்து கொண்டிருக்கிறது. இதை உணர்ந்து அதற்கு எதிரான போராட்டத் திறனை அதிகரிக்க வேண்டிய பெரிய பொறுப்பு மாதர் சங்கத்திற்கு உள்ளது’’ என்றும் எம்.ஏ.பேபி கூறினார்.
ஏ.ஏ.ரஹீம்
இந்தியா அச்சத்தால் ஆளப்படும் நாடாக மாறிவிட்ட தாகவும், ஊடகங்களும் ஜனநாயகவாதிகளும் ராஜதந்திரத்தின் இருட்டில் இருப்பதாகவும் இக்கருத்தரங்கில் ஏ.ஏ.ரஹீம் எம்.பி தெரிவித்தார். துன்புறும் மக்களை ஒருங்கிணைப்பதன் மூலமே வகுப்புவாதத்திற்கு எதிரான எதிர்ப்பு சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார்.