tamilnadu

img

சிவகங்கை மூத்த தோழர் எம். காசிநாதன் காலமானார்

சென்னை,அக்.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளர் எம்.காசி நாதன் அக்டோபர் 20 ஞாயிறன்று காலமானார். அவருக்கு வயது 90 ஆகும். அவரது மறைவுக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரி வித்துள்ளது. கட்சியின் தலைவர்கள், தோழர்கள், பல்வேறு அமைப்பினர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: 1952 இல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றியவர் தோழர் எம் காசிநாதன். அதன்பின்னர் 1964 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான பிறகு அதில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தார். ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் மாவட்ட பொறுப்புச் செயலாளராக சிறப்பாக பணியாற்றியவர். இராமநாதபுரம் மாவட்டம்  இராமநாதபுரம், சிவகங்கை என பிரிந்த பொழுது சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் சிவகங்கை மாவட்டத்தினுடைய சிஐடியு மாவட்ட தலைவராகவும், மாவட்ட செயலாளராகவும் பணியாற்றியவர் காரைக்குடி எம். காசிநாதன் அவர்கள்.   அவருடைய மறைவிற்கு  ஆழ்ந்த இரங்கலையும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார். அவரது இறுதி நிகழ்ச்சி ஞாயிறன்று மாலை நடை பெற்றது.