tamilnadu

img

ஒற்றைச் செங்கல்லும் வானதியின் எகத்தாளமும்

பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருக்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது அமையும் என்று கேட்டதற்கு, ஜப்பான் மீது செங்கல்லை தூக்கி வீசியிருக்கிறார். இந்த விசயத்தில், ஒற்றை செங்கல்லை வைத்து அரசியல் செய்தவர்கள் ஏன் இன்னும் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கிடுக்கிப் பிடியாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.  பொதுவாக, பாஜகவினர் சீரியசாக பேசுகிறார்களா அல்லது காமெடியாக பேசுகிறார்களா என்று பேட்டி எடுப்பவர்களுக்கு குழப்பமாக இருக்கும்.

ஆனால் இவர்கள் வில்லத்தனமான காமெடியன்கள். கேள்விக்கு முறையான பதில் இல்லையென்றால், சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதையாவது உளறிக் கொட்டுவது போல் காட்டிக் கொண்டு தப்பிக்க முயல்வார்கள். அந்த வேலையைத்தான் வானதி அம்மையாரும் செய்திருக்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியவர் பிரதமர் நரேந்திர மோடி. எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட வேண்டியது ஒன்றிய அரசின் பொறுப்பு. தேவையான நில ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை செய்து தருவதுதான் மாநில அரசின் பொறுப்பு. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான இடம் மாநில அரசினால் ஒதுக்கப்பட்டுவிட்டது. கட்டுமானப் பணி தாமதமாவதற்கு காரணம் ஒன்றிய அரசுதான். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் பாஜக ஆளும் மாநிலங்கள் சிலவற்றில் திறக்கப்பட்டு விட்டன.

ஆனால், மதுரையில் பிரதமர் நட்ட செங்கல் துணைக்குகூட இன்னொரு செங்கல் இல்லாமல் பயந்து போய் கிடக்கிறது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூட, மக்களவையில் இன்னொரு செங்கல்லுக்கு நாங்கள் இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அம்மையார் வானதி சீனிவாசன், “சட்டமன்றத் தேர்தலின்போது உதயநிதி ஸ்டாலின் செங்கல்லை தூக்கி கையில் வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்தாரே; தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, எய்ம்ஸ் கட்டுமானப் பணியை ஏன் துவக்கவில்லை” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ஒன்றிய அரசின் பொறுப்பற்ற தன்மையை சுட்டிக் காட்டத்தான் உதயநிதி அவ்வாறு செய்தார். ஆனால் பாஜகவினரோ, தேர்தல் நேரத்தில் செங்கல் சூளையில் கல் வெந்து கொண்டிருக்கிறது; அதற்குள் என்ன அவசரம் என்று கேட்டார்கள்.  இப்போது இவர் சொல்கிறார்: “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பான் நிதியுதவி தொடர்ந்து கிடைக்க வேண்டும். கொரோனா காரணமாக ஜப்பான் குழு இங்கு வர முடியவில்லை. அதனால் நிதி கிடைக்கவில்லை. அதனால் மேலும் ஒரு செங்கல்லை வாங்கக் கூட வழியில்லை” என்று நீட்டி முழக்கியிருக்கிறார். நல்ல வேளை, இனிமேல் இது குறித்து எங்களை கேட்கக் கூடாது. ஜப்பான் பிரதமரைத்தான் கேட்க வேண்டும் என்று கூறாமல் விட்டாரே! செங்கல்லை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்றும் அவர் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

செங்கல் பூஜை என்ற பெயரில் கலவரம் செய்தவர்கள் இவர்கள். இப்போது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை செங்கல் என்றாலே இவர்களுக்கு கோபம் கொப்பளிக்கிறது.  மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை விமான  நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்குமாறு தாம் ஏற்கனவே மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவிடம் கூறிவிட்டதாகவும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அமைச்சர் கூறாததைக் கூறிவிட்டார் என்றும் பேட்டியளித்துள்ளார். ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசனும், மாணிக் தாகூரும் சந்தித்த போது, அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வடமாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம்தான் இருக்கிறது;

தமிழகத்தில் ஏற்கனவே 3 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும் நிலையில், நான்காவதாக ஒரு சர்வதேச விமான நிலையத்தை அமைக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் கூறியதைத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியில் சொன்னார்.  தமிழகம் வழங்குகிற வரியை சுட்டிக்காட்டி 4 அல்ல, அதற்கு மேலும் கேட்கும் உரிமை தமிழகத்திற்கு உண்டு என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியது குறித்து பதில் சொல்ல தமிழக பாஜகவினருக்கு வக்கில்லை. தமிழகத்திற்காக எந்தத் திட்டத்தையும் இவர்கள் வாங்கி வருவதும் இல்லை. மாறாக, ஒன்றிய அரசு எதைச் செய்தாலும் அதற்கு ஜால்ரா தட்டுவது மட்டும்தான் தமிழக பாஜகவினர் மேற்கொண்டுள்ள ஒரே வேலை. அதைத்தான் அண்ணாமலையும் செய்து வருகிறார். இதனிடையே, பாஜக - அதிமுக கூட்டணி குறித்து கேட்டதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “அண்ணாமலை, அண்ணாமலை, அண்ணாமலை” என்று மூன்று முறை கூறியிருக்கிறார். கூட இருந்தவர்கள் மூன்று முறை அரோகரா போட்டால் வேலை முடிந்தது.

- மதுக்கூர் இராமலிங்கம்