tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தஞ்சாவூரில் தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக்  பொருட்கள் பறிமுதல் கடைகளுக்கு ரூ.22,500 அபராதம் 

தஞ்சையில் குடோன், கடைகளில் மாநகராட்சி அலுவலர்கள் நடத்திய சோதனையில் 1.5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ரூ.22,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. தஞ்சை மாநகராட்சி பகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில், மாநகராட்சி ஆணையர் கண்ணன் வழிகாட்டுதலில் மாநகராட்சி அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, அவற்றை பறிமுதல் செய்தும் வருகின்றனர். இந்த நிலையில், புதன்கிழமை தஞ்சை மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் மேற்பார்வையில் பொதுசுகாதார பிரிவினர் குழுக்களாகச் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுகாதார அலுவலர்கள் சீனிவாசன், ரமேஷ், சேவியர், ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் எபின்சுரேஷ், அனிபா, மோகன் ஆகியோர் வடக்கு வீதி அய்யங்கடை தெரு பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு குடோன் மற்றும் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1.5 டன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.22 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. பின்னர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வாகனத்தில் ஏற்றி, அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவிகளை கடித்து காயப்படுத்திய  விடுதி சமையலர் பணியிடை நீக்கம்

பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் சுமார் 30 பேர், அருகிலுள்ள வடகரை கிராமத்தில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். மார்ச் 31 அன்று மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விடுதியில் மாணவிகள் ஓடிப்பிடித்து விளையாடி உள்ளனர். மாணவிகள் சப்தமிட்டு விளையாடியது, விடுதி சமையலர் செல்வி(40) என்பவர் செல்போன் பேச்சுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, விளையாடிய மாணவிகளை கற்களால் அடித்துள்ளார். இதில், ஒரு மாணவியின் முதுகு தண்டுவடத்தில் காயமேற்பட்டு அவர் வலி தாங்காமல் துடித்துள்ளார்.  இதுகுறித்து சமையலரிடம், சக மாணவிகள் கேள்வியெழுப்பியதற்கு அவர்களை காலில் கடித்தும், கற்கள் மற்றும் கையால் தாக்கியும் காயப்படுத்தியுள்ளார். காயம்பட்ட மாணவிகளின் கூச்சல் சப்தத்தைக் கேட்டு, அங்கு வந்த விடுதி காப்பாளர் சங்கீதா, உடனே 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு காயமடைந்த இரு மாணவிகளை அனுப்பி வைத்துள்ளார்.இதுகுறித்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் புதன்கிழமை விடுதிக்கு நேரில் சென்று விசாரணை செய்து அறிக்கையை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவிடம் சமர்பித்தார். இதைத்தொடர்ந்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் சமையலர் செல்வி புதன்கிழமை மாலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து, கை களத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவாரூரில்  ஏப்.7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆழித்தேரோட்டம் வருகிற ஏப்.7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம், திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த குறை தீர்க்கும் நாள் கூட்டம் மறுநாளுக்கு (ஏப்ரல் 8-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.