tamilnadu

img

போராட்டத்தின் சுடர் விளக்கு சங்கரய்யா! - கே.பாலகிருஷ்ணன்

நூற்றாண்டு நிறைவாழ்வு கண்ட நேர்மையின் குரல். விடியலுக்காய் வாழ்ந்த விடிவெள்ளி. தமிழக இடதுசாரி இயக்கத்தின் இதயத்துடிப்பு, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கம்பீரம் என எத்தனை வார்த்தைகளால் விவரித்தாலும் என். சங்கரய்யாவின் வாழ்வும் பணியும் அடங்கி விடாது. சுதந்திரப் போராட்டத்தின் சாட்சியாய் வாழ்ந்து, சமதர்மத்தின் தூதுவனாய் சுடர்விட்ட அந்த மாமனிதர், இன்று நம்மிடையே இல்லை  என்பதை நம்புவதற்கே மனம் தயங்குகிறது. கடந்தாண்டு இதே நாளில் (நவம்பர் 15, 2023), தனது 101-வது வயதில் நம்மை விட்டுப் பிரிந்த அவரது நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த சங்கரய்யா, மதுரை மண்ணில் மாணவப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் கலந்து  கொண்டு சிறை சென்றார். விடுதலைக்குப் பின்னாலும் அவரது போராட்ட வாழ்வு தொடர்ந்தது. தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைத்துப்பகுதி மக்களுக்காகவும் சமூக நீதிக்காகவும் இடைவிடாது குரல் கொடுத்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மூன்றுமுறை உறுப்பினராக இருந்த அவர், சபையில் பேசும்போது எதிர்க்கட்சியினரும் அமைதியாக கேட்பார்கள். ஏனெனில் அவரது வார்த்தைகள் உண்மையின் ஒளியும்,  அனுபவத்தின் ஆழமும் கொண்டவை. கட்சியின் மாநிலச் செயலாள ராகவும், மத்தியக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய அவர், விவசாயிகள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவராகவும் செயல்பட்டவர்.

“நான் கம்யூனிஸ்ட். அதற்காக பெருமைப்படுகிறேன்” என்று எப்போதும் பெருமிதத்துடன் கூறும் அவர்- பொதுவுடமைக் கொள்கையில் உறுதியாக இருந்த அவர்- மனிதநேயத்தால் எல்லோரையும் அரவணைத்தார். அவரது வாழ்க்கை நேர்மைக்கு ஓர் உதாரணமாக திகழ்ந்தது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த சங்கரய்யா, தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்தார். அவரது நூற்றாண்டை யொட்டி தமிழக அரசு ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்கி அவரை பெருமைப்படுத்தியது. அரசு கொடுத்த விருதுத் தொகையை முத லமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கே அவர் கொடுத்துவிட்டார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளில், அவரது வாழ்வின் மாண்புகளை மீண்டும் நினைவுகூர்கிறோம். அவர் காட்டிய பாதையில் பயணித்து அவரது லட்சியங்களை நிறைவேற்ற ஏழை - எளியோரின் வாழ்வில் ஒளியேற்ற பாடுபடுவோம். அர்ப்பணிப்பு நிறைந்த அவரது வாழ்க்கையை பாடமாக கொண்டு அவரது பணிகளை நிறை வேற்றும் வகையில் செங்கொடி இயக்கத்தை திக்கெட்டும் கட்டுவோம்.  அதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

இன்று (நவ.15) தோழர் என்.சங்கரய்யா முதலாம் ஆண்டு நினைவு நாள்