tamilnadu

கல்வி அதிகாரிகளுக்கு எஸ்எப்ஐ கண்டனம்

கல்வி அதிகாரிகளுக்கு எஸ்எப்ஐ கண்டனம்

திண்டுக்கல், ஏப்.13- கோடைகாலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவர் நிருபன், மாவட்டச் செயலாளர் தீபக்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெயில் தாக்கம் கடுமையான கோடை விடுமுறை காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தை விரைவில் முடிக்கும் நோக்கில் பல தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன. கடும் வெயில் காலத்தில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள் வெயிலின் தாக்கத்தினால் பல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். பழனி அக்சயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பங்குனி உத்திர அரசு விடுமுறை நாளில் கூட சிறப்பு வகுப்புகளை நடத்தியுள்ளனர். இந்த வகுப்புகளுக்கு மாணவர்களை கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று கடுமையாக  உத்தரவிட்டுள்ளனர். இந்த பள்ளி கடும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாகும். மாணவர்கள் பெரும் கூட்ட நெரிசலில் பாதையை கடந்து வந்து சென்றிருக்கிறார்கள். இதனால் மாணவர்கள் உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புகளையும் விபத்துகளையும்  சந்திக்க நேரிடுகிறது. இதேபோல மாவட்டம் முழுவதும் பல தனியார் பள்ளிகள் தொடர்ந்து கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது கண்டனத்திற்குரியது.

மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனம்

வெயில் கடுமையான நேரத்தில் அடுத்த கல்வியாண்டிற்கான பாடங்களை முன்கூட்டியே நடத்துவதும், அதற்காக கோடை விடுமுறையை இல்லாமல் செய்வது  ஏற்புடையது அல்ல. இதுசம்பந்தமாக இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனமாக நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மாணவர்களின் உடல் மற்றும் மனநலனை பாதுகாப்பதில் கல்வித்துறையின் இந்த அலட்சிய போக்கு வருத்தமளிக்கிறது. இதுதொடர்வது மாணவர்களை போராட தூண்டுவதாக அமைகிறது.  எனவே, மாவட்ட நிர்வாகமும், மாவட்ட கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக் குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.  இவ்வாறு சங்க மாவட்டத் தலைவர் நிருபன், மாவட்டச் செயலாளர் தீபக்ராஜ் ஆகியோர் தங்கள் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.