tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜெயங்கொண்டத்தில்  வெறிநாய் கடித்து  சிறுமி உட்பட பலர் காயம்

அரியலூர், ஜுன் 10-  ஜெயங்கொண்டம் - சிதம்பரம் சாலையில் வெறி பிடித்த நாய் ஒன்று, அவ்வழியாக வந்து செல்லும் பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் துரத்தி துரத்தி கடித்ததால் பலர் காயமடைந்தனர்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் வெறிபிடித்த தெரு நாய் ஒன்று, தனியார் திரையரங்கு முதல், நான்குரோடு வரை ஓட்டம் பிடித்து அவ்வழியாக வந்த மூன்றரை வயது சிறுமியையும், தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் பணியாளரையும் கடித்தது. அதனைத் தொடர்ந்து, பழம் இறக்க வந்த வண்டி ஓட்டுநர் ஒருவரையும் கடித்தது. அதனைத் தொடர்ந்து நிற்காமல் ஓடி அரசு மருத்துவமனை பின்புறம் ஒரு பெண்ணை சரமாரியாக கடித்து குதறியுள்ளது.  இதில் அந்தப் பெண் காயத்துடன் ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அந்த வெறி பிடித்த நாய் தொடர்ந்து வேலாயுத நகர் பகுதியில் சிலரையும் கடித்ததாக கூறப்படுகிறது. ஜெயங்கொண்டத்தில் நாய்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் சிறுமிகள் என அனைவரையும் கடித்து துன்புறுத்துவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.  இதுகுறித்து நகராட்சியிடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மேலும் நகராட்சி நிர்வாகம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருநாய்களை அப்புறப்படுத்தி பொதுமக்களையும், பாதசாரிகளையும், பள்ளிச் சிறுமிகளையும் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாபநாசம் சுற்றுவட்டாரப்  பகுதியில் மழை

பாபநாசம், ஜுன் 10-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமை காட்டிய வெயில் காரணமாக, குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் சிரமப்பட்டு வந்தனர்.  வீட்டை விட்டு வெளியில் சென்று வருவதே சிரமமாக இருந்த நிலையில், ஞாயிறு இரவு ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த சூழல் நிலவியதால், வெயிலின் கடுமையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். இந்த மழை நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்கள், மர பயிர்கள், காய்கறி பயிர்களுக்கு பயனளிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

குழித்துறை  வாவுபலி பொருட்காட்சி  ரூ 1.77 கோடிக்கு ஏலம்

குழித்துறை, ஜூன் 10- குழித்துறை நூறாவது வாவுபலி பொருட்காட்சி ஒரு கோடியே 77 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. குமரி மாவட்டம், குழித்துறை 100 ஆவது வாவுபலி பொருட்காட்சி அடுத்த மாதம் 9 ஆம் தேதி முதல்  28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொருட்காட்சியின் முக்கிய தினமான வாவுபலி ஆடி அமாவாசையை ஒட்டி அடுத்த மாதம் 24 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. பொருட்காட்சி நடைபெறுவதற்கான ஏலம் மூன்றாவது முறையாக குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பொருட்காட்சி  ஏலம்  குழித்துறையை சேர்ந்த பால்ராஜ்  ரூ.1 கோடியே 77 லட்சத்து 7 ஆயிரத்துக்கு டெண்டர் போட்டுள்ளார் .ஒரு டெண்டர் மட்டுமே வந்தது . இது தொடர்பாக குழித்துறை நகராட்சி அவசர கவுன்சில் கூட்டம் சேர்மன் பொன்ஆசை தம்பி தலைமையில் நடைபெறுகிறது. இதில் உறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த  புற்றுநோய்  கண்டறியும் முகாம்

பாபநாசம், ஜுன் 10-   தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில், ஒருங்கிணைந்த புற்றுநோய் கண்டறியும் முகாம் நடந்து வருகிறது. இதில் கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் கண்டறியப் படுகிறது.  அழைப்பிதழ் தந்து நோயாளிகளை வீடு தேடிச் சென்று கண்டறியப்படுகிறது. இது ஆரம்பச் சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், மொபைல் வண்டி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் கபிஸ்தலம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தீபக், மருத்துவர்கள் ஜெகன், சௌந்தர்யா, அழகு சிலம்பரசி, பல்ராம், ஸ்வர்ணலதா, குலசேகர பாண்டியன் உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.  கபிஸ்தலம், பண்டாரவாடை, ஆதனூர், சக்கராப் பள்ளி, வீரமாங்குடி ஆரம்ப சுகாதார நிலையங்கள், 26 துணை சுகா தார நிலையங்கள் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. கருப்பை வாய் பரிசோதனையில் அறிகுறி தென்பட்ட 10  பேருக்கு, பாபநாசம் அரசு மருத்துவமனையில் பயாப்சி டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டு, பரிசோதனைக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

ஜுன் 16 இல்  ஒருங்கிணைந்த  குடிமைப் பணிகள் தேர்வு

கரூர், ஜுன் 10-  கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I&IA (தொகுதி–I மற்றும் தொகுதி-IA) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜுன் 15 அன்று முற்பகல் மட்டும் நடைபெற உள்ளது.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கரூர் மாவட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 13 மையங்களில் மொத்தம் 2894 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கூட அனுமதி சீட்டு உள்ள தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வர்கள், தேர்வு நாளன்று காலை 9 மணிக்கு மேல் மையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள், கருப்பு பந்து முனை பேனா மட்டும் பயன்படுத்தவும் மற்றும் தங்கள் போட்டோ அடையாளத்திற்கான ஏதாவது ஒரு அடையாள அட்டையினை உடன் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.  மேலும், பென்சில், அழிப்பான்கள், கைப்பேசி, கணிப்பான்கள், மின்னணு கடிகாரம் போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை என கரூர் மாவட்ட ஆட்சியர் தலைவர் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளார்.