சீனு.சின்னப்பா இலக்கிய விருதுகள் அறிவிப்பு
புதுக்கோட்டை, ஏப்.26-
புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு சீனு.சின்னப்பா இலக்கிய விருதுகளுக்கான முடிவுகள் புதுக்கோட்டையை அடுத்த பெருங்கொண்டான் விடுதியில் உள்ள சீனு.சின்னப்பா நினைவிடத்தில் வெளியிடப்பட்டது.
நிகழ்வுக்கு இயக்குனர், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி, பேக்கரி மஹராஜ் உரிமையாளர் அருண் சின்னப்பா ஆகியோர் முன்னிலையில் 10 பிரிவுகளில் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் மற்றும் படைப்பாளர்களின் பட்டியலை, தமுஎகச மாநில துணைத் தலைவர் கவிஞர் நா. முத்துநிலவன் வெளியிட்டார். நாவல் பிரிவில் செஞ்சி தமிழினியன் எழுதிய ‘ஊத்தாம் பல்லா’, மரபு கவிதைப் பிரிவில் பி.கே.பெரியசாமி எழுதிய ‘சமநீதித் தந்தை வள்ளலார்’, ஹைக்கூ கவிதை பிரிவில் ரகுநாத் எழுதிய ‘யானையின் தும்பிக்கையும் புத்தரின் கரமும்’, கட்டுரைப் பிரிவில் இளப்பிறை எழுதிய ‘அரங்க வெளியில் பெண்கள்’ மொழிபெயர்ப்பு பிரிவில் க.மாரியப்பன் மொழிபெயர்த்த ‘கருமிளகுக் கொடி’ ஆகிய படைப்புகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன. சிறுகதை பிரிவில் சிவசெல்வி செல்லமுத்து எழுதிய ‘நெல்கூட்டி’ புதுக்கவிதை பிரிவில் கௌ. ஆனந்தபிரபு எழுதிய ‘கனலெரியும் வேய்ங்குழல்’, சிறார் இலக்கியம் பிரிவில் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ‘எலியின் வேட்டை’, கட்டுரை பிரிவில் ஜோதி கணேசன் எழுதிய ‘டாலர் நகரம் 2.0’, சிறந்த சிற்றிதழ் பிரிவில் வதிலை பிரபாவை ஆசிரியராகக் கொண்டு நடத்தும் ‘மகாகவி’ இதழுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் விருதுடன் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை உள்ளடக்கிய 10 பிரிவுகளுக்கும் சேர்த்து ரூ.1 லட்சம் வழங்கப்படும். வருகின்ற மே தினத்தன்று புதுக்கோட்டையில் நடைபெறும் விழாவில் உயர்நீதிமன்ற நீதி அரசர் ஆர்.சுரேஷ்குமார் விருதுகளை வழங்கி சிறப்பிக்க உள்ளதாக தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி, செயலாளர் மகா.சுந்தர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.