காஞ்சிரப்பள்ளி, ஜுன் 5- சபரிமலை விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்தல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஜுன் 12, 13 தேதிகளில் நடைபெற உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் செபாஸ்டியன் குளத்துங்கல் தெரிவித்துள்ளார். செருவல்லி எஸ்டேட் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் உட்பட 2570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதையடுத்து, அரசால் நியமிக்கப்பட்ட திருவனந்தபுரத்தில் உள்ள மேலாண்மை மேம்பாட்டு மையம் சமூக தாக்க ஆய்வு நடத்தி, வரைவு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, வரும் 12ஆம் தேதி எருமேலி ரோட்டரி கூடத்திலும், 13ஆம் தேதி மூக்கடா சமுதாயக் கூடத்திலும் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும். பொதுமக்களின் கருத்தை கேட்ட பின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மறுவாழ்வு உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.