இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் இங்கிலாந்துக்கம் நீண்ட காலமாகத் தொடர்புள்ளது. தத்-பிராட்லி கோட்பாடு இந்திய கம்யுனிஸ்ட் இயக்கத்திற்கு உதவிகரமாக இருந்தது. பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான பிறகும் ஆர்.பி.தத் வழங்கிய வழிகாட்டுதல் கட்சியின் முன்னேற்றத்துக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அவரது வழிகாட்டலை பெற்றவர் கட்சியின் நவரத்தின தலைவர்களில் ஒருவரான ஹர்கிஷன் சிங் சுர்ஜித். அவரது வழிகாட்டலிலேயே இங்கிலாந்தில் இந்தியர்கள் ஒருங்கிணைந்த கிளை உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கம்யூனிஸ்டுகளின் சங்கம் (Association of Indian Communist) என்பது லண்டனில் செயல்படும் அமைப்பு ஆகும். இதன் உறுப்பினர்கள் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து பகுதிகளில் வாழ்கின்றனர். இந்த அமைப்பு தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உடன் இணைத்து கொண்டுள்ளது. எனவே கட்சியின் 23ஆவது கண்ணூர் மாநாட்டுக்கு முன்பாக இந்த அமைப்பின் 19ஆவது மாநாடு பிப்ரவரி 5/6 தேதிகளில் லண்டன் ஹீத்ரோ எனும் இடத்தில் நடக்க உள்ளது.
மாநாட்டின் ஒரு பகுதியாக ஜனவரி 22 அன்று கொடி நாள் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணி தொடங்குவதற்கு முன்பு லண்டனில் உள்ள ஹைகேட் பகுதியில் காரல் மார்க்சின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து புறப்பட்ட கொடிநாள் பேரணி மார்க்ஸ் நினைவு நூலகம் வழியாக மாநாடு நடக்கும் இடத்திற்கு சென்றது. மார்க்ஸ் நினைவு நூலகத்தில் மார்க்சியம் - லெனினியம் மற்றும் சோசலிசம் குறித்த சுமார் 60,000 புத்தகங்கள் உள்ளன, இங்குதான் லெனின் இஸ்க்ரா (தீப்பொறி) எனும் பத்திரிகையின் 17 இதழ்களை வெளியிட்டார். இஸ்க்ரா பத்திரிகைகள் ரஷ்யாவில் மார்க்சியம் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்குவதில் முக்கிய பங்கை ஆற்றியது. பினோஜ் ஜான் இந்த அமைப்பின் செயலாளராக உள்ளார். பிப்ரவரி 5,6 தேதிகளில் நடக்கும் மாநாட்டில் கண்ணூர் மாநாட்டுக்கான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தொகுப்பு: அன்வர் உசேன்