சென்னை, மார்ச் 16 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஐ.ஐ.டி சென்னை மாணவர்கள் கழிவு நீர் அகற்றும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்கள் என்று அதன் இயக்குனர் காமகோடி அறிவித்துள்ளார்.
1000 உயிர்கள் பலி
கழிவு நீர் தொட்டி மரணங்கள் தொடர் நிகழ்வுகளாக நடந்தேறி வருகின்றன. 1993 மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல் தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் 2022 வரை இத்தகைய மரணங்கள் 1000 உயிர்களை பலி கொண்டுள்ளன என சபாய் கரம்சாரி அந்தோலன் அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையே. தமிழ்நாட்டிலேயே அதிகமான மரணங்கள் - அதாவது 218 உயிர்ப்பலிகள் - நிகழ்ந்துள்ளன என்பதும் அந்த புள்ளி விவரங்கள் தரும் அதிர்ச்சி ஆகும்.
இந்நிலையில் துப்புரவு பொறியியல் ஆராய்ச்சிகள் மூலம் கழிவகற்றும் பணியில் இயந்திரப் பயன்பாட்டை விரைந்து கொண்டு வர வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதற்கான சில முயற்சிகள் அறிவிக்கப்பட்டும், ஓரிரு இடங்களில் இயந்திர பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டும் இருந்தாலும் அவை முறையாக முன்னெடுக்கப்படவில்லை. சென்னை ஐஐடியே கூட கடந்த காலங்களில் இது போன்ற கவனத்தை ஈர்க்கிற அறிவிப்புகளை வெளியிட்டாலும் உரிய முறையில் அமலாக்கத்திற்கு கொண்டு வரப்படவில்லை. இப்படியே பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற இயந்திரங்கள் இந்திய பருவச்சூழலுக்கு பயன்பட மறுப்பதும், அவற்றின் பழுதுகள் சரிசெய்யப்படுவது சிரமங்களை கொண்டதாக இருப்பதுமான அனுபவங்களும் உள்ளன. ஆகவே இதில் இந்திய ஆராய்ச்சிகள் உரிய தொகை ஒதுக்கீடுடனும், கவனத்துடனும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள்ளும் நடந்தேற வேண்டியுள்ளது. டி.ஆர்.டி.ஓ எனும் ஒன்றிய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு நிறுவனம்,
ஒன்றிய அரசின் தொழிலக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம், பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புகளின் ஈடுபாடும், முனைப்பும் கூட உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. ஐ.ஐ.டி சென்னையின் தற்போதைய அறிவிப்பும் மாணவர் முயற்சியாக சொல்லப்பட்டுள்ளதே தவிர ஐ.ஐ.டி.யின் தொடர் ஆய்வுகளின் விளை பொருளா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. அந்த ஆய்வுகளின் நிலைமை என்ன என்பதும் வெளியிடப்பட வேண்டும். ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி இப்புதிய இயந்திரத்தை ரூ.20 லட்சம் வரையிலான செலவில் உருவாக்கமுடியும், 20 இயந்திரங்களுக்கு மேல் ஆர்டர்கள் வரப் பெற்றால் இன்னும் விலைக் குறைப்பு சாத்தியம் என்றும் தெரிவித்துள்ளார். ஆகவே தமிழ்நாடு அரசு ஐ.ஐ.டி சென்னை மாணவர்களின் இப் புதிய இயந்திரத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்; முதற்கட்டமாக அனைத்து மாநகராட்சிகள், முக்கிய நகரங்களில் கொண்டு வந்து அனுபவத்தின் அடிப்படையில் பின்னர் தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.