சென்னை, டிச. 22- மாற்றுத்திறன் ஆசிரியர்களை பாதிக்கும் வகையில் பணி நிரவல் அரசாணை உள்ளதாகவும், இந்த பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஊராட்சி, நகராட்சி உள்ளிட்ட அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து மட்ட ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் கலந்தாய்வுக்கான விதிமுறைகளை வகுத்து பள்ளிக்கல்வித்துறை டிசம்பர் 17 தேதியிட்டு அரசாணை எண்.176 வெளியிட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்ட அரசாணை விதிகளின்படியே இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும், இதற்காக ஆண்டுதோறும் அரசா ணை வெளியிடப்படாது என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கும் அரசாணை
அரசாணையின் 2ஆம் பக்கத்தில் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் விதி (2-ஏ-1.3)ல், ஏற்கனவே பணிபுரியும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் தொடர்ந்து அதே பள்ளியில் பணியாற்ற விதிவிலக்கு அளிக்கலாம் என குறிப்பிட்டிருப்பது உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட மற்ற அனைத்து வகை மாற்றுத்திறன் ஆசிரியர்களையும், மனவளர்ச்சி பாதிப்பு உள்ளிட்ட மாற்றுத்திறன் குழந்தைகளை பராமரித்து வரும் ஆசிரியர்களை பாதிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற ஆணைகளுக்கு விரோதம்
கடந்த பத்தாண்டு கால அஇஅதிமுக ஆட்சியில் ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வின்போதும் மாற்றுத்திறனாளிகளை பாதிக்கும் அரசாணைகள் வெளியிடப்பட்டது. எங்களது சங்கத்தின் தலையீடு மற்றும் நீதிமன்ற ஆணைகள் பெறப்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டன.
திருத்தம் மேற்கொள்ள உத்தரவிடுக
உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட அனைத்து வகை மாற்றுத்திறன் ஆசிரியர்கள் மற்றும் மன வளர்ச்சி உள்ளிட்ட பாதிப்புக்குள்ளான மாற்று த்திறன் குழந்தைகளை பராமரித்து வரும் ஆசிரியர்களுக்கும் ஏற்கனவே உள்ளது போன்று விதிவிலக்கு அளிக்கும் வகையில் அரசாணையில் உரிய திருத்தம் செய்த பின்னர் அமல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கலந்தாலோசித்து அரசாணை
மாற்றுத்திறனாளிகளும் சம்பந்தப்பட்ட இப்படிப்பட்ட அரசாணைகள் வெளியிடுவதற்கு முன் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையரை கலந்தாலோசித்து வெளியிட அனைத்துத் துறை உயரதி காரிகளுக்கும் முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கம் சார்பில் வலியுறுத்திக் கோருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.