நாகர்கோவில், அக்.14- கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை வெள்ள அபாய அளவான 43 அடியை கடந்துள்ள நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 250 கன அடி உபரி நீர் கோதையாறு ஆற்றில் அக்.14 திங்களன்று மாலை 6 மணிக்கு திறந்து விடப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட பேரிடர் மேலாண்மை தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பேச்சிப்பாறை அணை வெள்ள அபாய அளவான 43 அடியை கடந்து திங்களன்று (அக்.14) காலை 10 மணியளவில் 43.85 அடியை எட்டியுள்ளது. அணை நீர்மட்டம் அதிக மழையினால், நீர் உள்வரத்து காரணமாக மாலை 6 மணியளவில் 250 கனஅடி/வினாடி உபரிநீர் பேச்சிப்பாறை அணையிலிருந்து கோதையாற்றில் திறந்துவிடப்பட உள்ளது. இந்நீர் களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காய்பட்டணம் கடலில் சென்று சேரும். எனவே கோதையாறு, தாமிரபரணி ஆற்றுக்கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருப்பதோடு, ஆற்றோரப் பகுதியில் குளிப்பதை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.