நாகப்பட்டினம் மார்ச் 12- நாகப்பட்டினத்தை அடுத்த நாகூர் பட்டினச் சேரியில் கச்சா எண்ணெய் கடலில் மீண்டும் கலந்தது இதையடுத்து அந்தப் பகுதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மற்றும் காலநிலை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் ஆய்வு செய்தனர். நாகப்பட்டினத்தை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறு வனத்தின் சார்பாக 20 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குழாயில் மார்ச் 2-ஆம் தேதி இரவு உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதனால் அப்பகுதி மீனவர்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாகியதோடு ஐந்து நாட்களாக கடலுக்குச் செல்லாமல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மூன்றுமுறை குழாய் உடைப்பை சரி செய்ததாக சிபிசிஎல் நிர்வாகம் அறிவித்தது. மேலும் சென்னை மணலி எண்ணெய் நிறுவனத்திலிருந்து வந்து வல்லுநர்கள் உடைப்பை சரி செய்து முற்றிலும் பழுது நீக்கப்பட்டதாக உறுதி அளித்ததன் பேரில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் மார்ச் 10- ஆம் தேதி பம்பிங் செய்தபோது கச்சா எண்ணெய் பீய்ச்சி அடித்து கடலில் கலந்தது. சரி செய்யப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். பம்பிங் செய்வது நிறுத்தப்பட்டதால் எண்ணெய் கசிவது குறைந்தது. நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மற்றும் காலநிலை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி ஆகியோர் ஆய்வு செய்தனர். பாதிப்புகள் மற்றும் குறைகளை மீனவர்களிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உடைப்பு ஏற்பட்ட குழாயை நிரந்தர மாக அகற்றுவது குறித்து மார்ச் 16-ஆம் தேதி முடிவு செய்யப்படும். எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றார். ஆய்வின் போது மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என். கௌதமன், சிபிசிஎல் அதிகாரிகள் மற்றும் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம நிர்வாகிகள் உடனிருந்தனர்.