tamilnadu

img

ரேஷன் பொருட்களை  வீடு வீடாகச் சென்று கொடுக்க முடியாது.... அமைச்சர் செல்லூர் ராஜூ கைவிரிப்பு

மதுரை
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் திங்களன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் டாக்டர் டி.ஜி.வினய், மாநகர காவல் ஆணையர் தேவாசீர்வாதம், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்,
கூட்டம் நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ,"கூட்டுறவுத் துறை மூலம் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்  2-ஆம் தேதி முதல் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கு 100 பேருக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படும். காலையில் 50 குடும்ப அட்டைகள் மாலையில் 50 அட்டைதாரர்களுக்கு என பிரித்து  வழங்கப்பட உள்ளது. பொது விநியோக பொருட்களும் இலவசமாக கிடைக்கும். ரேஷன் பொருட்களை  வீடு வீடாக கொடுக்க முடியாது. காய்கறிகளுக்காக மார்க்கெட்டுக்கு செல்லத்தேவையில்லை வீடுகளைத் தேடி காய்கறிகள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து 2,590 பேர் மதுரை மாவட்டத்தில் பணியாற்றிவருகின்றனர். அவர்களுக்கு உணவு, அடிப்படைவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறைச்சி வாங்குவதற்காக மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை  தவிர்க்க  மாவட்டம் முழுவதும் பரவலாக இறைச்சிக் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்த நபரின் வீட்டின் அருகே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு எத்தனை வீடுகள் உள்ளன இறந்தவர் யாரையெல்லாம் சந்தித்தார் எந்தத் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார் என்பது குறித்து கண்டறிந்து அவர்களுக்கும் இரத்தப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இறந்தவரின் வீட்டைச் சுற்றி 30 மேற்பார்வையாளர்கள், 176 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஆதரவற்ற முதியவர்களுக்கு தன்னார்வ தொண்டர்கள் மூலமாக தேவையான அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சுகாதாரத்திற்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் உள்ளன" என்றார்.

;