மதுரை:
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் நகைகளில் தேய்மானம் காரணமாகத் தான் எடைகுறைவு நடைபெற்றுள்ளது. வேறு எதுவும் நடைபெறவில்லைஎன கோவில் இணையர் ஆணையர் கல்யாணி வியாழனன்று விளக்கமளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள விளக்கம்:-
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் 1978-ஆம் ஆண்டு நகைகள் மற்றும் விலையுயர்ந்தவைகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன. தற்பொழுது சிவகங்கை துணை ஆணையர்/ நகை சரிபார்ப்பு அலுவலரால் 29.1.2019 முதல் 7.3.2019 வரை கோவிலின் நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு மறு மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட்டது.40 ஆண்டுகள் கழித்து நடைபெற்றமதிப்பீட்டில் பயன்பாட்டில் இருந்த மொத்த 215 இனங்களில் தேய்மானம் காரணமாக எடை குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, 18 பொன் இனங்களில் சுமார் 68 கிராம் எடை குறைவுக்கான தொகை ரூ. 2,11,790. 14 பொன் இனங்களில் சிறு சிறு பழுது ஏற்பட்டுள்ளதற்கான மதிப்பு ரூ.2,454 எனவும் தெரிவித்து மொத்தம் கூடுதல் ரூ. 214,244 எனவும் வெள்ளியைப் பொறுத்தமட்டில் மொத்தம் 344 இனங்களில் 42 இனங்களில் 25,811 கிராம் தேய்மானத்தின் அடிப்படையிலான எடை குறைவுக்கான தொகை ரூ.10,93,340. வெள்ளியில் தங்கம் முலாம் பூசப்பட்டதில் 43 கிராம்700 மில்லிகிராம் எடை குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கான மதிப்பு ரூ.1,35,670. மொத்தத்தில் வெள்ளி இனங்களில் மட்டும் ஏற்பட்ட இழப்பு ரூ.12,29,010. இதை அந்தப் பொருட்களை பொறுப்பில் வைத்திருந்த பணியாளர்களிடமிருந்து வசூல் செய்யலாம்.
தங்கம், வெள்ளி அனைத்தும் சரியாக உள்ளது. கடந்த மறு மதிப்பீட்டிற்கும் தற்போதைய மறு மதிப்பீட்டிற்கும் இடையே 40 ஆண்டுகள் இடைவெளி உள்ளதால் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் 13 பேர், விருப்ப ஓய்வுபெற்ற இரண்டு பேர், பணியில் உள்ளவர்கள் 32 பேர் என மொத்தம் 47 பேரிடமிருந்து நாற்பதாண்டு கால பயன்பாடு காரணமாக ஏற்பட்ட தேய்மானம், எடைகுறைவுக்கான இழப்பை ஏன் தங்களிடமிருந்து வசூல் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு தொடர்புடைய பணியாளர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது.இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை. முறைகேடுகள் ஏதும் நடைபெற்றதாக மேற்படி மதிப்பீட்டு அறிக்கையிலோ திருக்கோவில் பணியாளர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பிலோ தெரிவிக்கப்படவில்லை. இதற்காக மக்களோ பக்தர்களோ கோவில் நகைகளின் பாதுகாப்பு குறித்து அச்சமோ கவலையோ கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.