மதராசி கேம்ப் குடியிருப்பாளர்களுக்கு உரிய மறுவாழ்வு கோரி ஒன்றிய அமைச்சர்கள், தில்லி முதல்வருக்கு ஆர். சச்சிதானந்தம் எம்.பி., கடிதம்
திண்டுக்கல், ஏப். 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், தில்லியில் உள்ள மதராசி கேம்ப் ஜாங்புரா பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 400 குடும்பங்களுக்கு அதே இடத்தில் நியாயமான மறுவாழ்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் மற்றும் தில்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். தில்லி நகர்ப்புற குடியிருப்புகள் மேம்பாட்டு வாரியம் (DUSIB) மற்றும் தில்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) ஆகியவை, மதராசி கேம்ப் ஜாங்புரா பகுதியில் வசிக்கும் குடும்பங்களை அவர்களின் தற்போதைய இருப்பிடத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதிய குடியிருப்புகளுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையால் அங்கு வசிப்பவர்கள் தங்களது வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, குழந் தைகளின் கல்வி ஆகிய வற்றை இழக்க நேரிடும் என்றும், மேலும் முன் மொழியப்பட்ட குடியிருப்புகள் குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ள தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது கடிதத்தில், தில்லி தேசிய தலைநகர பிரதேச சிறப்பு விதிகள் சட்டம் 2011-ன் கீழ் மதராசி கேம்ப் ஜாங்புரா குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை தில்லி அரசு கடைபிடிக்க வேண்டும் என்றும், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் வழிகாட்டுதல் களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சச்சிதானந்தம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர் பின்வரும் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்: 1. அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் நியாயமான மறுவாழ்வு வழங்கி, அவர்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பாதுகாத்து, அடிப்படை வசதிகளை அணுக வழிவகை செய்தல். 2. பாதுகாப்பான மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்யப்படும் வரை எவ்வித இடிப்பு நடவடிக்கைகளும் தொடங்கப்படக் கூடாது. 3. குடியிருப்பாளர்களுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல் நடத்துதல். “மதராசி கேம்ப் பகுதி உழைக்கும் மக்கள் தில்லி தேசிய தலைநகர பிரதேசத்தின் அனைத்து துறைகளின் செயல்பாடுகளுக்கும் வளர்ச்சிக்கும் பங்களித்து வருகின்றனர். மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை மதித்து, அவர்களை இடம்பெயர்வு இல்லாமல் இணக்கமான முறையில் மறுவாழ்வு அளிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.