சென்னை, பிப்.14- இந்திய மின் ஊழியர் சம்மேளனத்தின் நிறுவனத் தலைவர் தோழர் இ.பாலானந்தனின் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் அமைப்பின் 40வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக ‘மின்துறையை பாதுகாப்போம், தனியார் மயத்தை தடுப்போம்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
எளமரம் கரீம்
இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் (இஇஎப்ஐ) தலைவர் எளமரம் கரீம், தோழர் பாலானந்தன் இந்திய அரசியலில் சிறந்த தலைவராகவும், தொழிற்சங்க இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவராகவும் விளங்கியதை நினைவுகூர்ந்தார். 1964 முதல் சிபிஐ(எம்) உறுப்பினராக இருந்த பாலானந்தன், சிஐடியு மற்றும் இஇஎப்ஐ உள்ளிட்ட தொழிற்சங்கங்களில் தலைமைப் பணியாற்றினார். மின்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்கள் முக்கியமானவை. 1991க்குப் பிறகு தாராளமய பொருளாதார கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதால், மின்துறையில் தனியார் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இன்று டாடா பவர், அதானி பவர் போன்ற நிறுவனங்கள் மின்சாரத் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மின்சார சட்டம் 2023 மூலம் தனியார் பங்களிப்பு மேலும் அதிகரிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார்.
எஸ்.தேவ்ராய்
இஇஎப்ஐ செயல் தலைவர் எஸ்.தேவ்ராய், பாலானந்தன் தொழிலாளர் இயக்கத்தில் ஆற்றிய பங்கைப் பாராட்டினார். 1978ல் கேரளாவில் நடந்த 52 நாள் வேலைநிறுத்தம் தொழிற்சங்க வரலாற்றில் முக்கியமானது எனக் குறிப்பிட்டார். 1991ல் தாராளமய கொள்கைகளை எதிர்த்து சிஐடியு நடத்திய போராட்டம் தொழிலாளர் இயக்கத்தை ஒன்றுபடுத்தியது. தற்போது மின்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும் என்று கூறினார்.
ஏ.கே.பத்மநாபன்
சிஐடியு துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், 1991க்குப் பிறகு தொழிலாளர்கள் 22 பொது வேலைநிறுத்தங்களை நடத்தியதை நினைவுகூர்ந்தார். தற்போது 29 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றி, உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக மார்ச் 18ல் தில்லியில் மாநாடு நடைபெறும் என்றார். இதற்கெதிராக அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
ஜி.சுகுமாறன்
சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு எதிரான போராட்டங்களை வலியுறுத்தினார். கேரள அரசு இதை அதானியிடம் ஒப்படைக்காது என்றாலும், தமிழக அரசு இதைத் தொடங்கியுள்ளது. இதை எதிர்க்க மின்ஊழியர் மத்திய அமைப்பு மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறது. இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் பொருளாளர் எஸ்.ராஜேந்திரன் வரவேற்றார். பொதுச் செயலாளர் பிரசாந்தோ நந்திசௌத்ரி உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். துணைத்தலைவர் தி.ஜெய்சங்கர் நன்றி கூறினார்.
தோழர் இ.பாலானந்தன் (1925-2009) இந்தியாவின் முக்கியமான தொழிற்சங்க மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். கேரளாவைச் சேர்ந்த இவர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காக போராடியவராகவும் பிரபலமானவர்.
தொடக்க காலம் மற்றும் அரசியல் வாழ்க்கை
இ.பாலானந்தன் இந்திய தேசிய காங்கிரஸில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1943ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (சிபிஐ) சேர்ந்தார். 1964ல் சிபிஐ பிளவடைந்த போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார்.
தொழிற்சங்க இயக்கத்தில் பங்கு
பாலானந்தன் சிஐடியு (CITU) மற்றும் இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பு (AEEFI) போன்ற தொழிற்சங்கங்களில் முக்கிய பங்காற்றினார். 1967 முதல் 1977 வரை கேரள சட்டப்பேரவை உறுப்பின ராகவும், 1988 முதல் 2000 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். தொழிலாளர் உரிமைகள் மற்றும் பொதுத்துறை மின்சாரத்துறையை பாதுகாப்பதற்காக அவர் நடத்திய போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.
போராட்டங்கள் மற்றும் சிறைவாசம்
தனது கொள்கைகளுக்காக பாலானந்தன் 4.5 ஆண்டுகள் தலைமறைவாகவும், 5 ஆண்டுகள் சிறையிலும் கழித்தார். 1978ல் கேரளாவில் நடந்த 52 நாள் மின்சார தொழிலாளர் வேலைநிறுத்தத்திற்கு அவர் தலைமை தாங்கினார். இந்த போராட்டம் தொழிற்சங்க வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி யாக கருதப்படுகிறது.
சமரசமில்லாத தலைவராக...
2009ல் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இ.பாலானந்தன் காலமானார். தொழி லாளர் இயக்கம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அவர் ஆற்றிய பங்கு இன்றும் நினைவு கூரப்படுகிறது. அவரது பணி தொழிலாளர்களுக்கு ஊக்கமளிப்பதோடு, தொழிற்சங்கங்களை ஒன்றுபடுத்துவதற்கும் உதவியது. தோழர் பாலானந்தன் ஒரு சமரசமில்லாத தலைவராகவும், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காக தன்னை அர்ப்பணித்தவராகவும் வாழ்ந்தார். அவரது வாழ்க்கை மற்றும் போராட்டங்கள் இன்றைய தலைமுறைக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளன.