மதுரை:
தமிழகத்தில் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் எவ்வளவு முறைகேடு நடந்துள்ளது? முறைகேட்டில் எத்தனை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது எத்தனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் விவசாயத் துறை செயலாளர், தமிழகஅரசின் விவசாயத் துறை செயலாளர் , தமிழககாவல்துறை தலைவர் ஆகியோர் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளது.இதுகுறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சிவபெருமாள் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், நல்லமன்னார்கோட்டை பகுதியில் சுமார் ஆயிரம்விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். வேடசந்தூர் தாலுகா உதவி விவசாயஅலுவலர் தெய்வேந்திரன் விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ்விவசாயிகள் அல்லாத தகுதியற்ற பலரைசேர்த்து முறைகேடாக நிதிஉதவி வழங்கியுள் ளார். இதில் ஆளும் கட்சியின் அரசியல் பிரமுகர்கள் தலையீடும் உள்ளது. அவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே முறைகேடாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கான பிரதமரின் திட்டத்தில் முறைகேடு செய்த வேடசந்தூர் உதவி விவசாய அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு புதனன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், விவசாயிகளுக்காக மத்திய ,மாநில அரசுகள் வழங்கும் திட்டங்கள் என்ன? அதற்காகஎவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது? எத்தனை விவசாயிகள் இந்த திட்டங்களின்கீழ் பயன் பெற்றுள்ளனர்? விவசாயி களுக்காக மானியமாக எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள்தான் பயன் பெறுகிறார்கள் என்பதை உறுதி செய்ய மத்திய- மாநில அரசுகள் பின்பற்றும் நடைமுறை என்ன? இது தொடர்பாக ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா, பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?நடவடிக்கையின் தற்போதைய நிலை என்ன? மேலும்கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் விவசாயிகளுக்கான திட்டத்தில் மோசடி செய்ததாக எத்தனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?விவசாயிகளுக்கான திட்டங்கள் தொடர்பாக பெருமளவில் விளம்பரப்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
மேலும் மத்திய- மாநில அரசுகளின் விவசாயத் துறை செயலாளர்கள் மற்றும் தமிழககாவல்துறை தலைவர் ஆகியோரை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாக உத்தரவிட்டனர். அனைவருக்கும் உணவூட்டும் விவசாயிகள் சுரண்டப்படுவது ஆரோக்கியமான அடையாளம் இல்லை. நாள் முழுவதும் ஒட்டிய வயிறுடன் உழைக்கும் விவசாயிகள் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய இயலாத நிலை உள்ளது. வேலை ஆட்களுக்கு ஊதியம் என எதையும் கருத்தில் கொள்ளாது குறைந்தபட்ச விலை நிர்ணயம் என்பது வருந்தத்தக்கது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு மத்திய -மாநில விவசாயத் துறை செயலாளர்கள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.