விருதுநகர், ஜன.24- ‘‘பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்’’ விருது பெற்ற இந்தி பேசும் 6 மாநில குழந்தைகளுடன் மட்டும் காணொலியில் கலந்துரையாடிய பிரத மர் மோடி மற்றும் மகளிர் மற்றும் குழந் தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் தமிழக குழந்தையுடன் மட்டும் கலந்துரையாடாமல் தவிர்த்துவிட்டனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசால் கலை, கல்வி, கலாச்சாரம், வடிவமைப்பு, புதிய கண்டு பிடிப்பு, துணிச்சல், ஆராய்ச்சி, சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘பிர தான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் தேசிய குழந்தைகள் விருது ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வந்தது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் இந்த விருதின் பெயரை ‘பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்’ விருது எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு, பஞ்சாப், சண்டிகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, திரிபுரா, பீகார் ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகள் அரிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்ததற்காக தேர்வு செய்யப்பட்டனர். இதில், தமிழகத்தில் விருதுநகர் லட்சுமி நகர் திரு.வி.க. தெருவைச் சேர்ந்த நரேஷ்குமார் மற்றும் சித்ராகலா தம்பதியின் மகள் சிறுமி விஷாலினியும் (வயது 7)ஒருவர். இவர் ஹைதராபாத்தில் உள்ள அத்தாப்பூர் டெல்லி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸில் படித்து வருகிறார். இவர் வெள்ளப் பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் பொருட்டு வெள்ளத்தில் மிதக்கும் தானியங்கி வசதியுடன் செயல்படும் உயிர்காக்கும் வீட்டினை கண்டுபிடித்துள்ளார். இந்த கண்டுபிடிப்பு நீரில் மிதக்கும் ஒரு உயிர்காக்கும் வீடு போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ளத்தின் போது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் நீரில் மூழ்கா மல் தங்களை தற்காத்துக் கொள்ளப் பயன்படுத்த முடியும். இந்தச் சாதனம் மனித உயிர்களைக் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், செல்ல பிராணிகள், முதிய வர்கள் மற்றும் உடல் ஊனமுற்ற நபர்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை காப்பாற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கண்டு பிடிப்பிற்கான ‘இளைய காப்புரிமை’ இந்திய அரசால் விசாலினிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறுமி விசாலினிக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகையினையும் வழங்குவதாக கூறப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட குழந்தை களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் காலை 11 மணிக்கு கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது.
எனவே, 7 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள், விருது பெரும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் காணொலிக் காட்சிக்காக காத்திருந்தனர். ஆனால், பிரதமர் மோடி, நண்பகல் 12.15 மணிக்கு காணொலிக் காட்சியில் கலந்து கொண்டார். மேலும் அந்நிகழ்ச்சியில், சண்டிகர், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, பீகார், திரிபுரா, பஞ்சாப் ஆகிய ஆறு மாநிலக் குழந்தைகளுடன் உரையாடினார். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுமி விசாலினியிடம் அவர் உரையாட வில்லை. இதனால், காணொலி காட்சி அரங்கில் இருந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர். சிறு மிக்கு பிரதமர் காணொலி வாயிலாக விருது மட்டும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலு வலர் இந்திரா, சிறுமியின் தந்தை நரேஷ் குமார் உட்பட அரசு அலுவலர்கள் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர். விருது பெற்ற சிறுமி விசாலினி, தொலைக்காட்சி செய்திகளில் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தான் பார்த்ததாகவும், எனவே, அதிலிருந்து மக்களை பாதுகாக்கும் வீட்டை வடிவமைக்க வேண்டும் எனத் தான் முடிவு செய்து அதனை வடிவமைத்ததாக கூறினார். மேலும் இந்த விருதினை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றியை யும் தெரிவித்துக் கொண்டார்.
(ந.நி.)