சென்னை, மே 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் தலைமை பொதுமேலாளருமான தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் கட்சியின் பொக்கிஷமாக திகழ்ந்தவர் என்று தலைவர்கள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு மதுரையில் மாரடைப்பால் காலமான தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் திங்களன்று (மே 2) புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் தலைமை தாங்கி பேசுகையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தன்னை மாணவர் சங்கத்தில் இணைத்துக் கொண்டார். பின்னர் கட்சியின் இடைக்குழு செயலாளராகவும், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றி, கடந்த 2001ஆம் ஆண்டு முதல் மாநில செயற்குழு உறுப்பினராக திறம்பட செயல்பட்டவர். தன்னுடைய உடல்நலம் குறித்து கவலைப்படாமல் இயக்கப்பணியாற்றியவர். எளிமையானவர், கம்பீரமானவர், ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தார். தத்துவ தெளி வுடன், அரசியல் உறுதியுடன் ஸ்தூலமாக கருத்துகளை முன் வைக்கக்கூடியவர். அவரது இழப்பு கட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்றார்.
டி.கே.ரங்கராஜன்
மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் பேசுகையில், எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை குறிப்பெடுத்து விவாதிப்பார். இந்த காலகட்டத்தில் ஸ்தாபன முடிவுகளை கறாராக அமல்படுத்தக் கூடிய தோழர்கள் எம்.என்.எஸ், கே.தங்கவேல் ஆகிய இரண்டு பேரை இழந்திருக்கிறோம். மூத்த தோழர்கள் பிற மாவட்டங்களுக்கு வருகிறார்கள் என்றால் அதை சுமையாகக் கருதாமல் தோழர்கள் அவர்களை வந்து அழைத்துச் செல்ல வேண்டும். அவரது இழப்பு கட்சிக்கு பேரிழப்பாகும் என்றார்.
அ.சவுந்தரராசன்
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், தாய்மொழி தமிழாக இல்லாத போதும், பிற மொழிகள் கலக்காமல் தெளிவாக தமிழ் பேசக்கூடியவர். குடும்பத்தை விட கட்சி எடுக்கும் முடிவு களை அமல்படுத்துவதில் முன்னுரிமை அளிப்பவர். தன்னை எதிலும் முன் நிறுத்திக் கொள்ளாதவர். தீக்கதிர் பொறுப்புக்கு வந்தவுடன் முழுமையாக அதிக ஈடுபாட்டுடன் அதில் செயல்பட்டார். அவரை போன்ற ஊழியர்கள் கட்சிக்கு அதிகளவில் தேவைப்படும் இந்த நேரத்தில் அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவர் கட்சியின் பொக்கிஷம் என்று புகழஞ்சலி செலுத்தினார். இந்த கூட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன் ஆகியோரும் பேசினர். நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், பத்ரி, வெ.ராஜ சேகர், கே.சாமிநாதன், தணிக்கை குழு தலைவர் பா.சுந்தர்ராஜன், சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.