tamilnadu

img

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்கக்கோரி மனு தாக்கல்....

மதுரை:
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களைப் போல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ப்ரீத்தி. இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் மருத்துவ மாணவர்சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் நடப்பு கல்வி ஆண்டிலிருந்தே அமலுக்கு வருகிறது. இந்த அவசரச் சட்டம் நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்குப் பொருந்தாது. இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்களுக்கு உள்ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பில்லை.அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்களுக்கும் பெரியளவில் வேறுபாடு இல்லை. எனவே அவசரச் சட்டத்தின் பலனை தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில்வெற்றிப்பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” இந்த மனுவை அவசர மனுவாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் வழக்கறிஞர் பினேகாஸ் காணொலி காட்சியில் வியாழனன்று ஆஜராகி வேண்டுகோள் வைத்தார்.இதையடுத்து மனுவை நவ. 9-ஆம்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.