tamilnadu

பொது வார்டில் இருக்க விரும்பாதவர்களுக்கு கட்டண அறை

பொது வார்டில் இருக்க விரும்பாதவர்களுக்கு கட்டண அறை  \

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

புதுக்கோட்டை, ஜுன் 10-  பொது வார்டில் இருக்க விரும்பாதவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படுவதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.  புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டியில், அனைத்துத் தரப்பினருக்கும் மருத்துவ வசதி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், கட்டண சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படுகிறது. மருந்து மாத்திரைகள் அனைவருக்கும் ஒன்றுதான். பொது வார்டில் இருக்க விரும்பாதவர்களுக்கு, அவர்களின் தனியுரிமை வசதிக்காக கட்டணம் பெறப்பட்டு அறை வழங்கப்படுகிறது.  தமிழ்நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 29,771 மருத்துவப் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி, எம்ஆர்பி, என்எச்எம் மற்றும் மாவட்ட மருத்துவச் சங்கம் ஆகியவற்றின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். 43,155 மருத்துவப் பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனாவைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் சேகரிக்கப்பட்ட 19 மாதிரிகள் படி வீரியம் குறைந்த ஓமிக்ரான் வகையைச் சேர்ந்தது. எனவே அச்சப்பட வேண்டியதில்லை. இணை நோய்கள் இருப்போர், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தோர், கருவுற்ற பெண்கள், முதியோர் மட்டும் முகக்கவசம் அணியலாம். அனைவருக்கும் கட்டாயமல்ல. தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகள் அதிகரிப்பு மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சேவையால் அரசு மருத்துமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது என்றார்.