திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலைய பராமரிப்பை தனியாரிடம் கொடுக்க எதிர்ப்பு
மாநகராட்சி நிர்வாகமே பராமரிக்க வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, ஜுன் 3- சிஐடியு அகில இந்திய பொதுக்குழு முடிவுகள் விளக்க பேரவை திருச்சி வெண்மணி இல்லத்தில் செவ்வாயன்று நடந்தது. கூட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். பொதுக்குழு முடிவுகள் குறித்து மாநிலச் செயலாளர் மகாலட்சுமி பேசினார். மாநில, மாவட்ட முடிவுகள் குறித்து, மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் பேசினார். திருச்சி மாநகராட்சி நகர விற்பனைக்குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சிஐடியு மாநில, மாவட்ட கமிட்டிகள் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. தொழிலாளர் சட்ட திருத்த தொகுப்பை திரும்பப் பெற வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 9 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்று வெற்றி பெறச் செய்வது. திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலைய பராமரிப்பை தனியாரிடம் கொடுக்காமல் மாநகராட்சி நிர்வாகமே பராமரிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் செல்வி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய பணியில் இருந்து ஓய்வு பெறும் குடிநீர் வடிகால் வாரிய சங்க மாநிலத் துணைத் தலைவர் மருதைராசு நிர்மல் பள்ளிக்கு ரூ.5000 நிதி வழங்கினார். மாவட்டப் பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.