சின்னாளப்பட்டி, மே 14- தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளை மீறியும் சனாதனத்தை வலியுறுத்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசுகின்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் அவரை திரும்பப் பெறக் கோரியும் ஆளுநரின் கொடைக்கானல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 14 (ஞாயிறன்று) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வத்தலக்குண்டுவில் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் வத்த லக்குண்டுவில் கருப்புக்கொடிகளை ஏந்தி, கருப்பு பலூன்களை பறக்க விட்டு, நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் தலைமை வகித்தார். வத்தலக்குண்டு ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன், நிலக்கோட்டை ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், ஆத்தூர் செயலாளர் சூசைமேரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆசாத், கலைச்செல்வன், சௌந்தரராஜன், பாலாஜி, கே.முகேஷ் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஆளுநரின் வருகைக்காக கொடைக்கானல் செல்லும் மலைச் சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்ற கொடைக்கானலில் போக்குவரத்தை மாற்றம் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.