tamilnadu

img

அறிவியல் தொழில் நுட்பத்தின் சாதனைப் பயணம்!

சென்னை,பிப்.16- இந்தியா சுதந்திரத்தின்  75 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஒன்றிய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் இம்மாதம் 22 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஒரு வாரகாலம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன்,  அறிவியல் பலகையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஸ்ரீகுமார் ஆகியோர் கூறியதாவது:-  பிப்ரவரி 28ஆம் தேதி ‘தேசிய அறிவியல்’ நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.  சர். சி. வி. ராமன் தன்னுடைய புகழ்மிக்க ‘ராமன் விளைவு’ குறித்து 1928ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி உலகிற்கு அறிவித்த நாள். அவரின் இந்த கண்டு பிடிப்புக்கு 1930ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நாளில் சிறப்பான நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி, ‘அறிவியல் மகத்தானது’ என்ற கருத்தாக்கத்தின் கீழ் அறிவியல் தகவல் தொடர்பு பரப்புரை மற்றும் விரிவாக்கம் என்ற அடிப்படையில் மிகச்சிறப்பான அறிவியல் திருவிழாவை நடத்துவதற்கு தயாராகி வருகிறோம். இந்த திருவிழாவை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சாதனை கண்காட்சிகள் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சாதனைகள் பெரும்பான்மையான மக்களை சென்றடையும் விதத்தில் கண் காட்சிகள் நடத்தப்படும். அறிவியல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த 25 ஆண்டுகளில்  எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்பட உள்ளன என்பது குறித்த விவரங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறும். நவீன இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சாதனைகள், கண்டுபிடிப்புகள்,  புதுமைகள் குறித்த முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். போட்டிகள் அறிவியல் இலக்கியம் சார்ந்த நிகழ்வுக்கும், பாடல், புத்தக வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.

தேசிய அளவில் மற்றும் உள்ளூர் அளவில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இந்த ஒரு வார கால நிகழ்வு நாட்டிலுள்ள 75 இடங்களில் நடைபெற இருக்கிறது. இந்த கொண்டாடங்கள் ஒரு வாரம் மட்டுமல்லாது தொடர்ந்தும் நடைபெறும். புதிய அமைப்பு உருவாக்கம்! அறிவியல் தொழில் நுட்பத்தை இந்திய மொழிகளில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தமிழ்நாட்டில் அறிவியல் பலகை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு பல்வேறு அறிவியல் பரப்புரைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது. இந்திய மொழிகளில் பரவலான பிரச்சாரத்தை கொண்டு செல்வதன் காரணமாக அறிவியல் தொழில்நுட்பம் குறித்த புரிதல்கள் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறோம். 75 என்ற இந்த முக்கியமான ஆண்டை நினைவு கூறும் விதத்தில் 75 இடங்கள், 75 அறிவியல் திரைப்படங்கள், 75 போஸ்டர்கள், 75 புத்தகங்கள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடைபெற உள்ளன. தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சிகளை, தமிழக அரசின் அறிவியல் தொழில்நுட்ப மையம் ஒருங்கிணைத்து நடத்துகிறது. இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு,பல்வேறு அமைப்புகள் கல்வி நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அறிவியல் பலகை அமைப்பும் இந்த முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு செயலாற்றி வருகிறது. தமிழ்நாட்டில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன இது குறித்த மேலும் தகவல்களுக்கு https://vigyanpujyate.in/ என்ற இணைய தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.