கிழக்கு கடற்கரை சாலையில், திருவள்ளூர் தொடங்கி (பாண்டிச்சேரி உள்ளடக்கி) கன்னியாகுமரி வரை 14 மாவட்டங்களில் 1,076 கிலோ மீட்டர் அளவில் ஒரு லட்சம் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் பல்வேறு அமைப்புகள் ஒரு கோடி பனை விதை சேகரிப்பு இயக்கத்தை தொடங்கி உள்ளனர். இதையொட்டி பேராவூரணியில் பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் 200 பேர் பங்கேற்று, ஒரு லட்சம் விதைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பனை விதைகள் கிழக்கு கடற்கரை பகுதியில் நடவு செய்யப்பட உள்ளன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடரை தடுக்கும் வகையிலும், இயற்கை சீற்றங்களை தணிக்கும் வகையிலும், கடல் மண் அரிப்பை தடுத்து, உயிர் வேலி அமைக்கும் முறையிலும் நடைபெறும் இந்த பனை விதை நடும் இயக்கத்தை அக்டோபர் 1 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.